மூளை - நம்பிக்கைகளின் மூலம் | Brain | scitamil.blogspot.com

கார்-எஞ்சின் எப்படி வேலை செய்கின்றது என்பதை அறியாமல், நாம் கார் ஓட்ட கற்றுக் கொள்ள முடியும். அது போலவே, எப்படி நம்-மூளை கற்கின்றது... சிந்திக்கின்றது என்பதை அறியாமல் நாம் கற்றுக் கொள்கின்றோம்... சிந்திக்கின்றோம். மூளை என்பது ஒரு கற்றுக் கொள்ளும் எந்திரம். சிறுவயது முதல், அது படிப்படியாக சிறுகச்சிறுக கற்றுக் கொள்கின்றது. இவ்வாறே நாம் கேட்க, பார்க்க, பேச. நடக்க, ஓட, சிந்திக்க, பகுத்து-அறிய என பலவற்றை கற்றுக் கொள்கின்றோம். நாம் எப்படி கற்றுக் கொள்கின்றோம் என்பதை இரு முக்கிய காரணிகள் நிர்ணயிக்கின்றன. நம் ஜீன்கள், நாம் வளர்ந்த/வாழும் சூழல். இதில் இரு முக்கிய சூழல்கள் உள்ளன: சிறுவயதில் நெருங்கிய பந்தங்கள், பிற்பாடு நாம் வாழும் சமூகம். சிறுவயதில் பதிந்து போனவை பசுமரத்தில் அடித்த ஆணி போன்றது தான்; பிறகு மாற்றுவது எளிதல்ல.
மூளை எப்படி கற்று கொள்கின்றது?
மூளை என்பது நரம்பு-செல்கள் (Neurons) பிணையப்பட்ட வலை (Neural Network). நாம் கற்கும்போது, புதிய நரம்பு-செல்-இணைப்புகளை உருவாக்கியோ அல்லது இணைப்புகளின் பலத்தை கூட்டியோ/குறைத்தோ நம் மூளை கற்றுக் கொள்கின்றது. இவ்வாறு புலன்கள் மூலமாக செல்லும் உலக விசயங்களை கொண்டு, மூளை மாதிரிகளை (Models) உருவாக்குகின்றது. இதில் ஒரு மாதிரியின் பலம் அல்லது நம்பிக்கை அதன் நிகழ்தகவை பொருத்தது. நாம் கற்று கொள்ளும்போது, அந்த மாதிரியின் நம்பிக்கை-நிகழ்தகவு அதிகரிக்கவோ, குறையவோ செய்யும்.
brain_240
Brain | scitamil.blogspot.com
இந்த மாதிரிகளைக் கொண்டே, நாம் வாழ்க்கையை/உலகைப் புரிந்து/கணித்து வாழ்கின்றோம். புலன்கள் மூலமாக மூளைக்கு செல்லும் எந்த விடயங்களும் உலகைப் பற்றிய முழுமை அல்ல. அந்த முழுமையற்ற விடயங்களிலிருந்து மூளை ஒரு மாதிரியை (அறிவியல் தியரி போல்) உருவாக்கி, உலகை... வாழ்க்கையைப் புரிந்து... கணிப்பதையே அறிவு என்கின்றோம். அனைத்துமே முழுமையற்று இருப்பதால், அனைத்துமே நம்பிக்கை தான்; நம்பிக்கையின் நிகழ்தகவு வேறாக இருக்கலாம்; 100% நிச்சயம் என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரின் மூடநம்பிக்கையும், அவரின் மூளையின்படி நம்பிக்கையே. ஆக, நம் நம்பிக்கை தற்சார்புடையது (Subjective). எனவே தான், பாரபட்சமற்ற வெளிசார்புடைய (Objective) ஆராய்ச்சி (அறிவியல்) தேவைப்படு கின்றது. அதைத் தான், கலிலியோ உட்பட பல அறிஞர்கள் நமக்கு காட்டினர். ஆனால், அதை எப்படி எல்லோருக்கும் நம்ப/புரிய வைப்பது?
எந்த ஒன்றும், பரிணாம வளர்ச்சி அடைய சில முக்கிய அம்சங்கள் உண்டு: (1) அதை சேமிக்க இடம் (Storage); (2) அதை நகல்கள் எடுத்தல் (Genes) இருக்கும்/சேமித்த இடம் DNA; அதன் நகல் எடுத்தலை இனப்பெருக்கம் என்றும் அதன் பிழைகளை மரபு-பிழைகள் என்கின்றோம். பரிணாம வளர்ச்சிக்கு நல்லது கெட்டதெல்லாம் தெரியாது; சூழலுக்கு ஏற்ப தக்கவைகள் பிழைத்து வளர்ச்சி அடையும். பரிணாம வளர்ச்சிக்கு மற்றொரு உதாரணம் மெம்கள் (Memes). மெம் என்பது ஒரு யோசனையைக் (Idea) குறிக்கும். கடவுள், மதம், அறிவியல், ஜாதகம், கலாச்சாரம், ஜாதி... இவை எல்லாம் மெம்கள் தான். இவை இருக்கும்/சேமித்த இடம் மூளை. இவை ஒரு மூளையிலிருந்து மற்றொன்றிக்கு காலகாலமாக மொழி, கலாச்சாரம் மூலம் பரவுகின்றது அல்லது நகல் எடுக்கப்படுகின்றது.
 ஜீன்களைப் போலவே செத்துப்போன மெம்கள் கோடான கோடி. செத்துப்போன கடவுள்களும் கோடான கோடி. இன்று பிழைத்திருக்கும் அனைத்து மெம்களும் ஏதாவது ஒரு வகையில் சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்தவைகளே! அந்த சூழலில், பல மூடநம்பிக்கைகளுக்கு நம் உணர்ச்சிகள் (உணர்ச்சிகள் ஜீன்களின் பரிணாம வளர்ச்சி) முக்கிய காரணிகளாக இருக்கின்றன. மனிதனின் ஆரம்ப கட்டத்தில், அறியாமையும் பய-உணர்ச்சியும் பல மூடநம்பிக்கைகளுக்கு முக்கிய காரணிகளாக இருந்திருக்கலாம். மெம்கள் வளர்ச்சி அடைய தேர்ந்த மொழி மற்றும் கலாச்சாரம் தேவை என்பதாலே, அதைக் கொண்ட மனிதனிடத்தில் மூடநம்பிக்கைகளும், அறிவியல் வளர்ச்சிகளும் காணமுடிகின்றது; மற்ற விலங்குகளில் அவற்றை காண முடிவதில்லை.
பகுத்தறிவு என்பது (Critical Thinking), ஒவ்வொரு விடயத்தையும் சீர்தூக்கி வெளிசார்புடன் (Objective) கற்று, அதற்கு ஏற்ப நம்பிக்கை-நிகழ்தகவுகளை அமைப்பது. ஆனால், அந்த அறிவும் நாம் வளர்ந்த/வாழும் சூழல்களைப் பொருத்தது. முறையான பகுத்தறிவு இல்லாத போது, மூளை எளிதாக ஏமாந்து நம்பிக்கை-நிகழ்தகவுகளை வெளிசார்பு-அறிவுக்கு (Objective-Knowledge) எதிராக அமைப்பதை மூடநம்பிக்கை எனலாம். ஆனால், பகுத்தறிவு என்பது நம் மூளையின் அறிவு-பகுதியைப் மட்டுமே ஏற்பதல்ல, நம் உணர்ச்சி-பகுதியையும் ஏற்பது தான்! மானிட உணர்ச்சி களுக்கு வடிகாலாகவும், சமூதாய வளர்ச்சிக்காகவும் சில விடயங்களை கடைபிடிப்பதும் பகுத்தறிவு தான்! இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவதும், நினைவு சின்னங்கள் எழுப்புவதும், பாடுவதும், கொண்டாடுவதும் பகுத்தறிவு தான். பகுத்தறிவு என்பது, நாம் எதை செய்தாலும் அதை புரிந்து கொண்டு செய்கின்றோமா அல்லது குருட்டுத்தனமாக செய்கின்றோமா என்பதில் தான் உள்ளது!

அரோரா - அசையும் துருவ ஒளி | Aurora | scitamil.blogspot.com


Aurora_370
 Aurora | scitamil.blogspot.com
அரோரா என்பது வடதுருவமான ஆர்க்டிக் மற்றும் தென்துருவ அண்டார்க்டிக் பகுதிகளில் ஏற்படும் இயற்கை ஒளியாகும். அரோரா என்பது ரோமனியர்களின் விடிகாலை பெண் கடவுளின் பெயராகும். கிரேக்கத்தில் போரியஸ் (Boreas) என்பது வடக்கு காற்று என்று பொருளாகும். இரண்டையும் இணைத்து வடதுருவத்தில் தெரியும் அசையும் வண்ண ஒளிக்கு பெயர் சூட்டி யுள்ளனர். இது புவியின் 60 டிகிரி அட்சரேகைக்கு மேலும், வானின் வளிமண்டலத் தில் மிக உயரத்தில் 80 கி.மி உயரத்துக்கு மேல் உள்ள வெப்பகோளத்தில் அழகான வண்ணத் திரையாக காட்சி அளிக்கிறது. புவியின் காந்தப் பரப்பி லிருந்து புறப்பட்ட மின்னூட்டம் பெறப்பட்ட துகள்களான ஆக்சிஜன் மற்றும் நைட்டிரஜன் அயனிகள், சூரியக் காற்றுடன் மோதும்போது வானில் வண்ணங்கள் தொடர்ந்து உண்டாகின்றன. இது பார்ப்பதற்கு வண்ணத் திரைகளைத் தொங்கவிட்டது போலிருக்கும். அவை அசையவும் செய்யும். இந்த வண்ண ஒளிப்பரப்பு பகலிலும் கூட நடக்கிறது. இரவில் இந்த ஒளியில் அமர்ந்து புத்தகம்/நாளிதழ் கூட படிக்கலாம்.


ஆர்க்டிக்கில் தெரியும் வண்ணத் திரைக்கு அரோரா போரியாலிஸ் (Aurora borealis) என்றும், அண்டார்க்டிக்கில் தோன்றும் வானின் வண்ண ஒளி ஆட்டத்திற்கு, அரோரா ஆஸ்த்திரேலிஸ் (Aurora australis) என்றும் பெயர். இந்த ஒளிகள் பெரும்பாலும் அழகான பச்சை, வயலெட், சிவப்பு வண்ணத்தில் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் காட்சி அளிக்கும். ஆக்சிஜனின் மின் னூட்டம் பெற்ற துகள் இருந்தால் அது பச்சை/பழுப்பு கலந்த சிவப்பாகவும், நைட்டிரஜன் துகள் எனில் நீளம்/ சிவப்பாக காட்சி தரும். அப்பகுதி மக்களால் இந்த ஒளிகள், கடவுளின் சமிக்ஞைகள் என்று நம்பப்படுகின்றன. அவற்றின் நிறங்கள் கணத்தில் மறைந்து மாறி அற்புதமாய் தெரியும். இந்த அற்புதத்தைக் காண கனடாவின் கடற்கரைக்கு மக்கள் பயணம் வருகின்றனர். இந்த அரோரா தெற்கே அன்டார்க்டிக்கா, தென் அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவிலும் தெரியும்.


சந்திரனில் காற்று இல்லாதது ஏன்? | scitamil.blogspot.com


பூமிMoonயின் புவியீர்ப்பு விசையைக் காட்டிலும் சந்திரனின் ஈர்ப்புவிசை ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை இருப்பதால்தான் அந்த விசை காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது. அத்தகைய விசை சந்திரனுக்கு இல்லாததால் அங்கே காற்று இல்லை. சந்திரனோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்புவிசை கொஞ்சம் பரவாயில்லை. பூமியின் ஈர்ப்பு விசையின் பாதியளவு உள்ளது. இதன் காரணமாக அங்கே கொஞ்சம் காற்று உள்ளது. எனவேதான் அங்கு உயிர்கள் வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அடிக்கடி வந்து மோதுவது உண்டு. இந்த அபாயகரமான ஈர்ப்பு விசையால் வியாழனில் மனிதன் உயிர் வாழ இயலாது.

மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? | scitamil.blogspot.com

ஜாதி, மத, மொழி, நாடு என்ற பேதமின்றி, இந்த பூமியில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒரு தாய் மக்களே.
அந்தத் தாய் யாரென்று அறிந்தால் மிகவும் ஆச்சரியமும், பெருமையும் கொள்வீர்கள். அந்தத் தாய் 'நட்சத்திரம்' தான். நம்மில் பலர் நட்சத்திரம் (ஸ்டார்) ஆக வேண்டும் என்று கனவு கண்டிருப்பார்கள். அவர்களுக்கு, தாங்கள் நட்சத்திரத்தின் குழந்தைகள்தான் என்ற செய்தி பெருமையாகத்தானே இருக்கும்.
நாம் அனைவரும் எப்படி நட்சத்திரத்திலிருந்து வந்தோம் என்று விளக்கமாக பார்ப்போம்.
உயிர்கள் உருவாக பல தனிமங்கள் தேவை. மனிதர்களாகிய நமக்கு ரத்தம் சுத்தமாவதற்கு வேண்டிய ஆக்சிஜென், எலும்பின் உறுதிக்குத் தேவையான கால்சியம், ரத்தத்திற்கு வேண்டிய இரும்புச் சத்து, மற்றும் கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் என்று தனிமங்களும், கூடவே உப்பில் உள்ள சோடியம் மற்றும் பொட்டசியம், மக்னிசியம் போன்ற பல தனிமங்கள் தேவை. அவை இல்லை என்றால் உயிர் வாழ இயலாது என்பது அனைவர்க்கும் தெரியும்.
மேலும் தங்கம், வெள்ளி, அலுமினியம் போன்ற பல தனிமங்கள் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளன.

இந்தத் தனிமங்களை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி அறிவியலாளர்கள் ஓர் அட்டவணையை ஏற்படுத்தியுள்ளனர் (PERIODIC TABLE). இந்தத் தனிமங்களைப் பற்றி ஆராய்ந்து அதன் அமைப்பு, குணங்கள், பயன்கள் போன்றவற்றை அறிந்து, அவைகளைப் பயன்படுத்தி, நாம் வாழ்வை இனிதே நடத்த அறிவியலாளர்கள் வழி வகுத்திருக்கிறார்கள்.
மாரடைப்பு வந்தால் உயிருக்குப் போராடும் ஒருவருக்குத் தேவையான, ஆக்சிஜன் மற்றும் பல மருந்துகளைக் கொடுத்து, பாசக்கயிறைப் போட்டு இழுத்துக் கொண்டிருக்கும் எமனிடம் போராடி, அந்த பாசக்கயிறை அறுத்து, போய்க்கொண்டிருந்த உயிரை மீண்டும் கொண்டு வர உதவுவார் மருத்துவர்.
ஒவ்வொரு தனிமங்களின் குணங்களை வெகு நாள் ஆய்ந்து அறிந்த அறிவியலாளர்கள் பணி தான் அவர்களுக்கு உதவியாயிருக்கின்றது.
இந்த தனிமங்கள் எல்லாம் பூமியில் கிடைக்கின்றன. சரி பூமிக்கு இவை எப்படி வந்தன?
நட்சத்திரங்களில் தான் முதலில் இவை எல்லாம் உருவாகின என்று அறிவியலாளர்கள் சொல்லுகிறார்கள். ஏன் பூமியில் நாம் காணும் அனைத்துப் பொருட்களும் நட்சத்திரத்திலிருந்துதான் உருவாயின. நட்சத்திரத்திலிருந்து அவை பூமிக்கு எப்படி வந்தன?
நம் சூரியன் என்ற நட்சத்திரத்தில் இது போன்ற பொருட்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால் நம் சூரிய‌னில் உருவாகும் பொருட்கள் நமக்குக் கிடைக்காது. நம்முடைய சூரியனுடைய தாத்தாவாகிய முதல் தலைமுறை நட்சத்திரம் உருவாக்கியதை நாம் அனுபவிக்கிறோம். முன்றாம் தலைமுறையைச் சேர்ந்த நமது சூரியன் உருவாக்கும் பொருட்கள் நமக்குப் பின்னால் வரும் தலைமுறைக்கும், உயிர்களுக்குத்தான் உபயோகமாகும்.
எப்படி என்று பார்க்கலாமா?
சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி, ஒரு பலூனைப் போல விரிவடைந்த இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இரண்டே இரண்டு தனிமங்கள் தான் இருந்தது. அவை ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்(சுமார் 75 சதவீதம் ஹைட்ரஜன், 25 சதவீதம் ஹீலியம்). வாயுக்களான இவை இரண்டுமல்லாமல் நாம் காணும் நட்சத்திரங்கள், கோள்கள் எதுவுமே, ஏன் எந்த தூசும் கூட பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இல்லை.
ஆச்சரியம் என்னவென்றால் அந்த இரண்டு தனிமங்கள் (வாயுக்கள்) தான் இப்போது நாம் காணும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், அதைச் சுற்றிவரும் கோள்களும், இந்த பூமியும், அதில் நாம் காணும் அனைத்துப் பொருட்களுமாக உருமாறின.
எப்படி?
பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் தோன்றிய ஹைட்ரஜன் அணுக்களின் ஈர்ப்புவிசையினால் ஏற்பட்ட பிணைப்பினால் தான் பிரபஞ்சத்தின் முதல் தலைமுறை நட்சத்திரங்கள் உருவாகின. பல கோடி வெப்பத்தைக் கொண்ட இந்த நட்சத்திரத்தின் உள்ளே, அந்த வெப்பத்தினால் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்ற தனிமம் புதிதாக உருவாகியது. இந்த இணைப்பில் தோன்றும் ஆற்றல் தான் ஒளியாகிறது. நட்சத்திரங்களுக்குள்ளே தொடர்ந்து பல கோடி ஆண்டுகளாக இந்த இணைப்பு நடந்துகொண்டே இருக்கின்றது.
நட்சத்திரதிற்குள்ளே இரண்டு ஹைட்ரஜன் இணைந்து ஒரு ஹீலியம் அணு புதிதாக உருவாவதுபோல, கூடவே இன்னும் பல அணுச்சேர்க்கைகள் நடக்கின்றன. புதிதாக உண்டான இரண்டு ஹீலியம் அணுக்கள் இணைந்து 'பெரிலியம்' என்ற தனிமம் உண்டாகிறது. அதோடு நிற்காமல் ஒரு ஹீலியம் அணுவும் ஒரு பெரிலியம் அணுவும் சேர்ந்து உயிர்களுக்குத் தேவையான முக்கியமான தனிமம் 'கார்பன்' உருவாகிறது.
புதிதாக தோன்றிய அணுக்களின் இணைப்பு மேலும் தொடர்கிறது. இரண்டு பெரிலியம் அணுக்கள் இணைந்து நம் உயிரின் ஆதாரமான பிராணவாயு (OXYGEN) உருவாகிறது. இரண்டு கார்பன் அணுக்கள் இணைந்து ஒரு 'மெக்னீசியம்' அணு உருவாகிறது. இப்படி பற்பல அணுச்சேர்க்கைகள் நடந்து ஒன்று, இரண்டு என்று தனிமங்களை வரிசைப்படுத்திய அட்டவணையில் உள்ள 26 என்ற எண் கொண்ட இரும்பு வரை நட்சத்திரங்களுக்கு உள்ளே பெருமளவில் உற்பத்தியாகிறது.
நட்சத்திரங்களுக்குள் உள்ள சுமார் கோடி டிகிரி வெப்பத்தில் தான் இந்த அணுச்சேர்க்கைகள் நடக்க முடிந்தது. அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் புதிய தனிமங்களை உண்டாக்கும் பணியில் மனிதன் இறங்கி சில தனிமங்களை உண்டாக்கி வெற்றியும் பெற்றுள்ளான். முன்னதாக பூமியில் உள்ள தனிமங்களிலிருந்து தான் அவை உருவாக்கப்பட்டன. சிறிய அளவில் தான் இவைகளை உண்டு பண்ண முடியும். பெருமளவில் பூமியில் கிடைப்பவை நட்சத்திரங்களில் உற்பத்தியானவை.
தனிமங்களின் அட்டவணையில் இரும்பிற்கு மேல் உள்ள தனிமங்களான தங்கம், வெள்ளி, யூரேனியம் போன்றவை உண்டாக, நட்சத்திரங்களில் உள்ள வெப்பத்தைக் காட்டிலும் அதிக வெப்பம் தேவை. அதனால் நட்சத்திரங்களுக்குள் தனிமங்கள் உற்பத்தி, மூடப்பட்ட தொழிற்சாலை போல நின்று விடுகிறது.
பிறகு எப்படி அவை உருவாகின?
அந்த முதல் தலைமுறை சூரியன் தன வாழ்நாட்கள் முடிந்தபின் அதிபயங்கரமாக வெடித்துச் சிதறும். பிரபஞ்சத்தில் அது மிக அற்புதமான காட்சியாகும். சூப்பர் நோவா என்று கூறுவார் இதனை. அப்படி வெடிக்கும் போது உண்டாகும் அதிபயங்கர வெப்பத்தில் இரும்பு அணுக்களும் அணுச்சேர்க்கையால் இணைந்து இரும்பிற்கு மேல் அணு எண் கொண்ட யூரேனியம், தங்கம், வெள்ளி போன்ற மற்றெல்லா தனிமங்களும் உண்டாகி, நட்சத்திரம் வெடிக்கும் போது, வாயுக்களாக பிரபஞ்சத்தில் தூக்கி எறியப்பட்டன. பல கோடி மைல்கள் பரந்து விரிந்து கிடக்கும், பார்க்க பரவசமூட்டும் இந்த வாயுக்கூட்டங்களை 'நேபுல்லா' என்றழைப்பர்.
இந்த நேபுல்லா என்ற வாயுக்கூட்டதில் நட்சத்திரத்தில் உருவான எல்லா தனிமங்களுடன், பிரபஞ்சத்தில் ஏற்கனவே உள்ள ஹைட்ரஜன் வாயுவும் கலந்திருக்கும்.
பிரசவ மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்படும்போது எல்லோருக்கும் தெரியும், குழந்தைகள் பிறக்கப் போகின்றன என்று. அதே போல பிரபஞ்சத்தில் காணும் இந்த நேபுல்லா என்ற வாயுக்கூட்டங்களை காணும் விண்வெளி ஆய்வாளர்களுக்கு அந்த வாயுக்கூட்டத்தில் 'நட்சத்திரங்கள்' பிறக்கப் போகின்றன என்று தெரியும்
காரணம் , ஈர்ப்பு விசை தன் பணியை அங்கு துவக்கும். ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றை ஒன்று இழுத்து, வெப்பமும் அடர்த்தியும் அதிகமாகி, புதிய அடுத்த தலைமுறை நட்சத்திரம் (நமது சூரியனைப் போல) உருவாகும். நட்சத்திரத்தின் தோற்றம் ஒரு அதி பயங்கர வெடிப்புடனும், அதிர்வுடனும் நடக்கும். புதிதாக தோன்றிய நட்சத்திரத்தைச் சுற்றி, தூசுகளும், வாயுக்களும் வெடிப்பினால் எறியப்பட்டு அவைகள் அந்த நட்சத்திரத்தை சுற்ற ஆரம்பிக்கும். அவைகளும் ஈர்ப்பு விசையால் இணைந்து, முதலில் சிறு சிறு பாறைகளாக உருவாகி, அந்தப் பாறைகள் மேலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, அந்த நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கோள்களாக உருவாகும். அந்த தூசுகளிலும், வாயுக்களிலும் தான் எல்லா தனிமங்களும் உள்ளனவே. அதனால்தான் அந்தக் கோள்களில் ஒன்றான நமது பூமியிலும் அனைத்து தனிமங்களும் கிடைக்கின்றன.
சூரியனைச் சுற்றிவரும் கோள்கள் தவிர மற்ற பாறைகளிலும் (ASTEROID) இந்த தனிமங்கள் இருக்கும். ஏனென்றால் சூரியன் உருவாகும்போது உண்டான கோள்களைப்போல தோன்றியதுதான் அந்த பாறைகளும். நமது சூரிய குடும்பத்தைச் சுற்றிவரும் அந்தப் பாறைகளில் தங்கம் உட்பட பல தனிமங்கள் இருப்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
சமீபத்தில் ஒரு கோள் கண்டுபிடிக்கப் பட்டது. பூமியை விட இரண்டு மடங்கு பெரிய அந்தக் கோள் முழுவதும் வைரங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஒருதடவை சென்று வந்தால், உலகத்தின் முதல் கோடீஸ்வரன் ஆகிவிடலாம். சிக்கல் என்னவென்றால் அந்த கோள் நாற்பது ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. எப்படியாவது முயற்சி செய்து அங்கே போய் சேர்ந்து விடலாம் என்று நினைப்போருக்கு ஒரு மோசமான தகவல் என்னவென்றால் அங்கு வெப்பம் சுமார் 4000 டிகிரி வரை உள்ளது என்பதுதான்.
பூமியில் உள்ள சத்துக்களை எடுத்து விளையும் பயிர்களைத் தின்று வளரும் மிருகங்களையும், அந்த மிருகங்களையும், பயிர்களையும் உண்டு வளரும் நாமும் அடிப்படையில் நட்சத்திரத்தில் இருந்து வந்தவர்கள் தான். இனி யாரவாது நம்மைப் பார்த்து நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டால், எந்த வித ஐயமுமின்றி 'நான் நட்சத்திரத்திலிருந்து வருகிறேன்' என்று கூறலாமல்லவா?
நட்சத்திரத்தின் உள்ளே உற்பத்தியான நாம் எல்லாம் அதன் பிள்ளைகள் அல்லவா? நாம் அனைவரும் ஒரு தாய் மக்களல்லவா? ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, புவியின் பல பகுதிகளுக்கு பரவிச் சென்ற மனிதம் ஒரு மாபெரும் குடும்பம் என்பதை இந்த அறிவியல் உண்மை மீண்டும் நிரூபிக்கின்றதல்லவா?
ஒரு தாய் மக்களிடையே, ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என்ற பெயரில் கலவரங்களும், போர்களும் வேண்டுமா?
ஒருகாலத்தில் குகைகளில் கற்களை மட்டுமே ஆயுதமாய் உபயோகித்து வாழ்ந்த காட்டுமிராண்டிகளின் வாழ்க்கையைப் பார்த்து நாம் கேவலமாக இப்போது சிரிக்கின்றோம். அவர்கள் அறியாமல் செய்த தவறு அது. நாகரீகம் நன்கு வளர்ந்த இந்த காலத்தில் ஜாதி, மதம், மொழி, இனம், நாடு என்ற பெயரில் சண்டையிடும் நம்மைப் பார்த்து நம் வருங்கால சந்ததியினர் 'படித்த முட்டாள்கள்' எனக் கூறி எள்ளி நகையாடுவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை

வாயேஜர் - முடிவில்லா பயணி | scitamil.blogspot.com

குழந்தையின் அழுகை. முத்தச்சத்தம். ஐம்பத்தைந்து மொழிகளில் வாழ்த்து செய்தி. திமிங்கலம் கத்தும் ஓசை. இதனுடன் மொசார்ட் (Mozart) போன்றோரின் இசை.
தொலைக்காட்சியை வேகமாக மாற்றும்போது கேட்பது போல், மேலே சொல்லப்பட்ட சம்பந்தம் இல்லாத ஒலிகள் ஒன்றாக பதிவு செய்யப்படுகிறது. அதுவும் தங்கமுலாம் பூசிய கிராமபோன் ரெக்கார்ட் போன்ற தகடுகளில். யாருக்காக? அத்தனை விசேசமா அந்த நபர்?
1977-ல் அமெரிக்கா ஏவிய செயற்கை கோளான வாயேஜரில்தான் இந்தத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. பல்லாயிரம் வருடங்கள் கழித்து இந்த ஓசைகளை கேட்கப்போகும் நபர் கேவலமான தோற்றம் கொண்ட ஒரு வேற்றுகிரகவாசியாக இருப்பார் என்பது நம்பிக்கை. பூமி, மனிதகுலத்தின் தோற்றம்/வளர்ச்சி பற்றி, மேலும் தகட்டை எப்படி இயக்குவது போன்ற தகவல்களும் அதிலேயே உண்டு.
பெரும் பயணம்:
1970-களில் பெரும் பயணம் என்ற நாசாவின் திட்ட நோக்கம் சூரிய குடும்பத்தின் வெளிப்பகுதிகளை ஆராய்வது. எழுபதுகளின் பின் பகுதியில் யுரேனஸ், வியாழன், சனி, நெப்ட்யூன், ப்ளூட்டோ போன்ற கிரகங்கள் சீரான வரிசையில் அமையும் அரிய நிகழ்வு விண்வெளியில் நடந்தது (அஜீத்தும் விஜய்யும் சந்தித்துக்கொள்வதை போல் அரியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்). அந்த படிக்கட்டு போன்ற வரிசையை சரியாக உபயோகித்தால், உண்டிவில்லில் கல்லை வைத்து அடிப்பது போல் குறைந்த சக்தியில் செயற்கைகோளை எளிதில் மிக அப்பால் அனுப்பலாம். ஆனால் பணப்பற்றாக்குறையால் அந்த திட்டம் முழு வெற்றியடையவில்லை. ஆனால் அதன் பயனாக நமக்கு கிடைத்தது வாயேஜர் திட்டம், முந்திரி ஸ்வீட் வாங்க போய் பணமில்லாமல் பால் ஸ்வீட் வாங்கிய மாதிரி..
1977-ல் வாயேஜர் 1, 2 என்று சிறிய அளவு காரின் எடை கொண்ட இரட்டை விண்கலன்கள் முதலில் ஏவப்பட்டது வியாழன் மற்றும் சனியை ஆராய. அனுப்பிய வேலை முடிந்ததும் அப்படியே விட்டு விடாமல், 'இவனெல்லாம்  அப்படியே போக விட்றணும்' என்று அதற்கு மேலும் பயணிக்க விட்டு விட்டார்கள். சனி பார்வை பட்டால் ஆகாது என்று இங்கு ஒரு மூட நம்பிக்கை. வாயேஜர் இரட்டையர்கள் சனியையே பார்த்துவிட்டு அப்பால் கிளம்பியவர்கள்.
இந்த இரு கலன்களும் சேகரித்த, சேகரித்துக் கொண்டிருக்கும் தகவல்கள் இதுவரை ஏவப்பட்ட செயற்கை கோள்களிலேயே அதிக உபயோகமாக இருப்பவை. சனியின் வளையங்களை பற்றி, வியாழனுக்கும் (யுரேனஸ்/நெப்ட்யூன்-க்கும் கூட) வளையங்கள் உண்டு, யுரேனஸ்/நெப்ட்யூன் போன்ற கிரகங்களின் காற்றுவெளி, வியாழனின் துணை கிரகமான ஐயோ (Io)வில் எரிமலை உண்டு போன்ற என்னற்ற செய்திகளை நமக்காக கொடுத்தன இந்த கலன்கள். 1990 வாக்கில் வாயேஜர்1-ன் கேமராவை திருப்பி எடுக்கப்பட்ட சூரியக்குடும்ப புகைப்படம் மிகவும் பிரபலம். பூமி அதில் ஒரு நீலப்புள்ளி.
அது இருக்கட்டும். முப்பத்தைந்து வருடங்கள் கழித்து இப்போது என்ன வந்தது வாயேஜருக்கு? மனிதன் செய்த பொருட்களிலேயே அவனிடமிருந்து மிகத்தொலைவில் இருக்கும் பொருள் வாயேஜர் - நமது சூரிய குடும்பத்தின் எல்லையை தாண்டும் முதல் மனித சகவாசம் கொண்ட பொருள் அதுவே! சென்ற வருடம் அந்த எல்லையை தாண்டி, நட்சத்திரங்களுக்கிடையில் இருக்கும் வெளியில் தற்போது பயணித்துக்கொண்டு இருக்கிறது. ஹீரோயின் வீட்டை விட்டு ஓடி போய் கொஞ்சம் லேட்டாக கண்டுபிடித்து துரத்த ஆரம்பிப்பார்களே, அது மாதிரி எல்லையை தாண்டிவிட்டது என்று நமக்கு தெரிந்தது இப்போதுதான்.
தங்கத்தகடு:
முதலில் சொன்ன அந்த தகட்டை பற்றி பல ரசிக்கக்கூடிய தகவல்கள் உண்டு. பூமியை பற்றியும் மனிதர்களை பற்றியும் வேற்று ஜீவன்களுக்கு தெரிவிக்க முனையும் இந்த 'காலப்பெட்டி'யில் மனிதனின் தோற்றம்/வளர்ச்சி போன்றவற்றை விளக்கும் 115 படங்கள், இந்திய சங்கீதம் உட்பட பல நாட்டுக்கலைஞர்களின் இசைக்கோர்வைகள் ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள் சொல்லப்பட்ட ஐம்பைத்தைந்து மொழிகளில் கன்னடம், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளும் உண்டு (தமிழ் இல்லை). அவைகளை இங்கு சென்று கேட்கலாம்: http://voyager.jpl.nasa.gov/spacecraft/greetings.html. அதே தகட்டில் இடம் பெற்றுள்ளார் பல்கேரிய நாட்டுப்புற பாடகர் வல்யா. அவர் நாட்டை சேர்ந்த பலரே அறியாத அவரின் குரல், பல்லாயிரம் வருடங்களாக அண்டத்தை சுற்றிக்கொண்டிருக்கும்!
இத்தகட்டை ஒருங்கிணைத்த குழுவின் தலைவர் உலகப்புகழ் பெற்ற அறிஞர் கார்ல் சாகன். இந்த கலன் நெடுந்தூரம் பயணிக்க நிறைய வாய்ப்புண்டு என்று பார்த்து பார்த்து தகவல்களை பதித்தவர். காசட்டில் பல படங்களில் இருந்து கலவையாக பிடித்த பாடல்கள் மட்டும் பதிவு செய்துகொண்டு திரிவோமே, அது மாதிரி (காசட்டா அப்படின்னா என்பார்களா லேட்டஸ்ட் தலைமுறை?).
அதன் உள்ளடக்கத்தை பலர் பாராட்டினாலும், 'இருக்கும் இடம் முதற்கொண்டு நம்மை பற்றி அத்தனை தகவல்களும் வேற்றுலகவாசிகள் தெரிந்து கொண்டால், நம்மை அழிப்பதற்கு நாமே அவர்களுக்கு திட்டம் போட்டு கொடுப்பதாகாதா?' என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. வெளியாள் என்றாலே நம்மை அழிக்கத்தான் போகிறான் என்கிற மனித பயத்தில் இருந்து உருவாகும் எண்ணம் -பக்கத்து வீடு/ஊர், பக்கத்து நாட்டு மக்களை காரணமே இல்லாமல் எதிரியாக நினைக்கிறோமே? அது போல்.
கார்ல் சாகன் பதிலளிக்கிறார்:
"நாம் அன்றாடம் உபயோகிக்கும் தொலைக்காட்சி அலைகள் கொண்டு கூட நம் இருப்பிடத்தை எளிதில் கண்டுகொள்ளலாம்" (கொல்லலாம் இல்லை); "அப்படி வருபவர்களிடத்தில் நட்பாக இருக்க நாம்தான் கொஞ்சம் முயல்வோமே?" மேலும், "இந்த தகட்டை படிக்க 'அவர்கள்' கொஞ்சமேனும் முன்னேறியிருக்க வேண்டும். ஆனால் இந்த பாட்டிலை விண்வெளிக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் இப்புவியின் உயிர் பற்றிய மிக நம்பிக்கையான ஒரு செய்தி அறிவிக்கப்படுகிறது அல்லவா?"
பயண முடிவு?
இப்போது வாயேஜரின் கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. ஏன்? சுற்றுலா போய் விட்டு எப்போது நாம் போட்டோ பிடிப்பதை நிறுத்துவோம்? அதேதான். பேட்டரி பிரச்சினை. மினி ப்ளூட்டோனியம் ரியேக்டர்கள் மூலம் கிடைக்கும் சொற்ப சக்தியை கொண்டு தற்போது இயங்கும் வாயேஜர், இன்னும் 12 ஆண்டுகளில் சுத்தமாக சார்ஜ் இல்லாமல் போய்விடும். அதனால் முடிந்தளவு தேவை இல்லாத சாதனங்களை அணைத்து வைத்துவிடுகிறார்கள். சில அதுவாகவே செயலற்று போய் விட்டது; Cosmic Ray System போன்ற சாதனங்கள் பிரதிபலன் பாராமல் இன்னும் உழைக்கிறது. மின்சக்தி எல்லாம் தீர்ந்து போய் அதற்கும் மனிதனுக்கும் நடக்கும் கடைசி பரிவர்த்தனை 2025 வாக்கில் இருக்கும். அதற்கு பிறகு நாம் இருப்போமோ இல்லையோ, பல ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வருடங்களுக்கு வாயேஜர் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

எச்சரிக்கை! செல்பேசி | scitamil.blogspot.com

இன்றைய அறிவியல் உலகம் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலம் மிக உன்னதமான பிணைப்பை உலக மக்களிடையே எளிமையாக்கிவிட்டது.

கண்ணிமைக்கும் நேரத்தில் கடல் கடந்து பறக்கும் குரல் ஒலிகளின் ஒப்புயவர்வற்ற செயல்பாடுகளுக்கு செல்பேசி முக்கிய பங்காகிவிட்டது. காடுகள் மேடுகள் எல்லாம் உழைத்து களைத்துப்போன ஏழைமக்கள் வாழும் குடிசைப்பகுதிகளின் சந்து பொந்துகளிலெல்லாம் சந்தடியில்லாமல் நுழைந்து சாகசம் படைத்து அவர்தம் வாழ்க்கைத் தொடர்பை வலுவாக்கி வருவதும் செல்பேசிகளே. செல்போன்களின் சேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. 2005 - ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகில் இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 126 கோடியாக இருந்தது என்றும் அது, நாளொன்றுக்கு 46000 பேர் வீதம் புதிதாக அதிகரித்து வருவதாகவும் கணக்கிட்டுள்ளனர்.

இங்ஙனம் பரவிவரும் செல்பேசிகளின் பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கேடுகள் விளைவிக்கின்றன என்பதனை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. இயற்கையின் இயற்கையான கதிர்வீச்சுகளிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளாகிய ஒயர்லெஸ், ரேடியோ, டிவி, ரேடார், செல்போன்கள் இவைகளின் இயக்கத்தால் வெளிவிடப்படும் ரேடியோ அலைகள், கதிரியக்க அதிர்வுகள், நுண்ணலை அதிர்வுகள், நுண்ணலை கதிர்வீச்சுகள் போன்றவை உயிர்களின் மீது பல்வேறு தீயவிளைவுகளை உருவாக்கி வருகின்றன. இதில் இன்றைய செல்பேசிகளே அபரிமிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதனை அறிய முடிகிறது.

இதுபோலவே செல்பேசி "டவர்களும்" மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%, தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக கண்டறிந்துள்ளனர்.

சிறுகுழந்தைகள் செல்பேசிகளை பயன்படுத்துவது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதனையும் பிரிட்டீஷ் தேசிய கதிரியக்க பாதுகாப்புக்கழகம் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை 3.3 மடங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக பாதிக்கின்றன என்றும், குழந்தைகளின் மண்டைஓடுகள் மிகவும் மெல்லிய தன்மையுடையதாக இருப்பதால் அவை ஆபத்தான கதிர்வீச்சுகளினால் எளிதாக பாதிக்கப்படுவதால் 30 முதல் 40 வயதிற்குள் பெரும்பாலோருக்கு மூளைக்கட்டிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் உறுதிபடுத்தியுள்ளனர்.

செல்பேசிகளின் தீயவிளைவுகள் பற்றி பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் தீவிர ஆய்வுகளில் பல உண்மைகள் வெளியாகி உள்ளன.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த "ராப்பாபோல்ட் மருத்துவ அறிஞர்கள் அமைப்பு" செல்பேசி கதிர்வீச்சுகளை விலங்குகளில் பரிசோதனை செய்ததில் அவற்றின் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். கண்களுக்கு அருகில் செல்பேசி கதிர்வீச்சு செல்லும்போது வெப்பநிலை சுமார் 3டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதால் கண்புரை நோய்கள் எளிதில் (Cataract) உருவாவதனை கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்க அறிவியலறிஞர்கள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின்படி செல்பேசி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோர் ஆண்மைக்குறைவு, விந்தணுக்குறைவு, மகப்பேறின்மை போன்ற ஆபத்திற்குள்ளாவதை கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த மருத்துவ அறிஞர்களும் பல்வேறு ஆய்வுகள் மூலம் இதை தெளிவுபடுத்தியுள்ளனர். சாதாரணமான மனிதர்களைவிட நாள்தோறும் குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் செல்பேசிகளை பயன்படுத்துவோரின் விந்தணு எண்ணிக்கை 25% குறைவாகவே காணப்படுவதனை அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன.

அமெரிக்க ஓஹியோவின், கிளீவ்லேண்ட் இனப்பெருக்க மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் அசோக் அகர்வால் விலங்கினங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி விந்தணுக்களை உருவாக்கும் செல்கள் மின்காந்த கதிர்வீச்சுகளினால் அல்லது அதனால் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாதிக்கப்படுவதனை கண்டறிந்து வெளியிட்டார். செல்பேசிகளை இடுப்பு பகுதியில் வைத்திருப்பவர்களின் அடிவயிறு, தொடையிணைப்பு பகுதிகள் எளிதில் சூடாவதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாகும்.

அன்னாள் நரம்பியல் ஆய்வுகளும், டாக்டர் பாவ்லோ ரோஷினியின் ஆய்வுகளும் செல்பேசி கதிர்வீச்சுகள் மூளைசெல்களை தூண்டுகின்றன என்பதனை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய தூண்டுதல்கள் காக்கைவலிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.

சுவீடன் தேசிய உழைப்பாளர் வாழ்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வாளர்களின் அறிக்கையின் படி 2000 மணி நேரத்துக்கு மேல் செல்பேசியை பயன்படுத்திய 905 முதியவர்கள் மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக செல்பேசி பயன்படுத்தாதவர்களை விட 3.7 மடங்கு அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் ஒப்பிட்டுள்ளனர்.

இலண்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - மூன்று பிரிட்டிஷ் பல்கலை கழகங்களுடன் சேர்ந்து நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் படி அதிக செல்பேசி பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்துள்ளனர்.

எனவே செல்பேசி பயன்படுத்துவோர் குழந்தைகளிடம் செல்பேசிகளை கொடுப்பதை தவிர்க்கவும்.

செல்பேசி வைத்திருப்போர் கவனத்திற்கு :

பேசும்போது உடலுக்கு சற்று தொலைவில் வைத்து பேசுவதும், வாய்ப்புகள் உள்ளபோது சாதாரண தொலைபேசிகளை பயன்படுத்துவதும். வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக செல்பேசி தொடர்புகளை தவிர்ப்பதும், அதிகமாக சூடாகும் வரை பேசுவதை தவிர்ப்பதும். செல்பேசி பயன்படுத்துபவருக்கு மிகவும் பாதுகாப்பானதாகும்.

நினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன? | scitamil.blogspot.com

மீன்வாடையுடன் சேர்ந்து வீசும் உப்புக் காற்றைப் பிளந்தபடி, கட்டுமர முகப்புக் கட்டையை மார்பில் ஏந்திக் கொண்டு, அலைகளைத் தாவித் தாவி சமாளித்துக் கொண்டு நான் ஓடுவேன். கழுத்தாழம் தண்ணீர் வந்ததும் கரை நோக்கிப் பாயும் அலையில் மரக்கட்டைமீது படுத்துக் கொண்டு அலை ஓடுவேன். எத்தனை முறை விளையாடினாலும் இந்த விளையாட்டு எனக்குச் சளைக்காது. உப்பு படிந்து காய்ந்துபோன என் முதுகு இழுத்துக் கட்டிய டமாரத்தோல் மாதிரி இருக்கும்.
Brain
How brain memory works | scitamil.blogspot.com

பெரிய அலை ஒன்றில் தலை குப்புற கவிழ்ந்தேன். சமாளித்து நிமிர்வதற்குள் இன்னொரு அலை உள்ளே இழுத்துக் கொண்டது. மரண பயம் என்றால் என்ன என்பது எனக்கு அந்த நிமிடத்தில் தெரிந்தது. மரக்கட்டையோடு கரையில் துôபாக்கி வீசி என்னைக் காப்பாற்றியது ஒரு அலை. நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு சென்னை இராயபுரம் கடலில் நடந்த அந்த நிகழ்ச்சி இன்னமும் தெளிவாக எனக்கு நினைவிருக்கிறது. என்னோடு விளையாடி என்னைக் காணாமல் பரிதவித்த பாலசுந்தரமும் நினைவுக்கு வருகிறான். கல்யாண வீட்டில் பந்தல் கட்டும் தொழில் செய்து பிழைத்து வரும் அவனை கிழவனாகப் பார்த்த உடனே 40 ஆண்டுகளுக்குப் பிறகும் என்னால் அடையாளம் தெரிந்து கொள்ள முடிந்தது. இத்தனை தகவல்களும், இன்னம் இதுபோல ஆயிரமாயிரம் நிகழ்வுகளும், இடங்களும், உணர்வுகளும் என் மூளையில் எங்கே எவ்விதம் பதிவாகியிருக்கிறது? நினைவு என்பது என்ன?

சென்ட்டர் ஃபர் சிஸ்ட்டம்ஸ் நியூராலஜி, பாஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் உள்ளது. அங்கே ஆராய்ச்சி செய்யும் லாங்குயன் லின் மற்றும் ஜோ டிரெய்ன் என்ற இரு நரம்பியல் வல்லுநர்கள், அண்மையில் வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சி முடிவுகள் மூளையில் எப்படி நினைவுகள் பதிவாகின்றன என்பதை ஓரளவுக்கு விளக்குவதாக உள்ளது. நரம்புக்கூட்டத்தின் சமநேர மின்துடிப்பே நினைவுகள். நேரடியாக மின் முனைகளை எலிகளின் மூளையில் பதித்து, அவை இயல்பாக நடமாடும்போதே நினைவுகள் எப்படி பதிகின்றன என்பதை நவீன கருவிகள் கொண்டு ஆராய்ந்தனர். தக்க புள்ளியியல் கணக்குகளைப் பயன்படுத்தி தகவல்களை தொகுத்திருக்கின்றனnannர். நரம்பு செல்களின் வழியாகப் பாயும் மின்சார ஒட்டம்தான் நினைவுகள் என்பதை பொதுவாக எல்லோருமே ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின்படி ஒரே சமயத்தில் துடித்து செயல்படும் நரம்பு செல் கூட்டங்களே குறிப்பிட்ட நினைவுகளுக்குக் காரணம் அவற்றில்தான் நினைவுகள் சேமிக்கப்பட்டிருக்கின்றன என்பது முடிவு.

உணர்வுகள்-நினைவுகள்-பயிற்சிகள் ஆகியவை அனைத்தும் வெவ்வேறு நரம்புசெல் கூட்டங்களாக சேமிக்கப்பட்டுள்ளன என்பது நிரூபணமாகியுள்ளது. எப்படி நரம்புக்கூட்டத்தில் நினைவுகள் பதிகின்றன என்பதை இன்னமும் தெளிவாகப் புரிந்துகொண்டால், கைகளைப் பயன்படுத்தாமல் எண்ணங்கள் மூலமாக கருவிகளைக் கட்டுப்படுத்துல், தானாகச் சிந்தித்து செயலாற்றும் ரோபாட்டுகளை (உருபிகள்) உருவாக்குவது, மனத்தில் உள்ளதை குறியீடுகளாக மாற்றி கம்யூட்டரில் இறக்கி சேமித்து வைத்துக்கொள்வது போன்ற தொழில் நுட்பங்கள் வளரும்.

பாஸ்ட்டன் பல்கலை விஞ்ஞானிகள் ஒரு பரிசோதனையில் இரண்டுவித எலிகளைப் பயன்படுத்தினார்கள். ஒன்று மரபியல் மாற்றத்தின் மூலம் கெட்டிக்கார எலியாக மாற்றப்பட்டது. "டூகி" என்பது அதன் பெயர். இதற்கு நேர்மாறாக படுமந்த புத்தியுடைய எலியையும் உருவாக்கி இருக்கிறார்கள். இரண்டையும் வைத்துக்கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டனர். வாழ்நாளில் எத்தனையோ கோடி காட்சிகளைப் பார்க்கிறோம் பேச்சுகளை கேட்கிறோம், ஆயினும் திடுக்கிடும் நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளத்தைத் தொடும் சம்பவங்கள் மட்டுமே நினைவில் ஆழமாகப் பதிகின்றன. எனவே ஆராய்ச்சி மேற்கொள்ளவிருக்கும் எலிகளுக்கும் மூன்று விதமான திடுக்கிடும் சம்பவங்களை வழங்குகினார்கள்.

மனிதனைப் போலவே எலிகளுக்கும் நிலநடுக்கம் என்றால் குலைநடுங்கும். திடீரென்று ஆகாயத்திலிருந்து இறங்கி வந்து தாக்கும் பருந்தென்றால் அதனிலும் பயம். உயரமான இடத்திலிருந்து கீழே விழுவதென்றால் சொல்லவேண்டியதில்லை. இம்மூன்று திடுக்கிடும் நிகழ்வுகளையும் எலிகளுக்கு செயற்கையாக வழங்கினார்கள். எலியைப் பெட்டிக்குள் போட்டு குலுக்கி நிலநடுக்கம் போல பயமுறுத்தினார்கள். முதுகில் "புஸ்"ஸென்று காற்றை திடீரென்று பீய்ச்சி அடிப்பதன் மூலம் பருந்து மேலிருந்து வந்து தாக்குவதுபோல பயமுறுத்தினார்கள். கூண்டோடு எலியை மேலிருந்து கீழே விழச் செய்து பயமுறுத்தினர்.

மூளையின் மேற்புறமாக உள்ள கார்டெக்ஸ் பகுதியை விலக்கிவிட்டு உள்ளே பார்த்தால் நடுவில் ஆட்டுகிடாவின் வளைந்த கொம்பு போன்று உறுப்புகள் இரண்டு பக்கத்திற்கு ஒன்றாக இருப்பதைக் காணலாம். இதன் பெயர் ஹிப்போகேம்ப்பஸ். இதில் தான் உணர்வுபூர்வமான நினைவுகள் பதிவாகின்றன. நமது நரம்பியல் நண்பர்கள் இந்தப் பகுதியில் தேர்வுசெய்யப்பட்ட 200 தனித்தனி நரம்பு செல்களில் மெல்லிய மின் முனைகளைச் செருகி அவற்றில் ஏற்படும் மின் அழுத்த வேறுபாடுகளைத் தொடர்ந்து கவனித்தனர்.

எலிகளின் மூளை மிகச்சிறியது; வேர்க்கடலை பருப்பு அளவுதான் இருக்கும். அதில் ஹிப்போகேம்ப்பஸ் எத்தனை சிறிதாக இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். அதிலுள்ள 200 செல்களை தேர்வுசெய்து அவற்றினுள் மெல்லிய உலோக இழைகளை செலுத்துவது என்பது எத்தனை செயற்கரிய செயல் என்றும் எண்ணிப் பாருங்கள். இந்த ஏற்பாடுகள் எலிகளின் இயல்பான நடமாட்டத்திற்கு ஊறு செய்யாமல் இருக்கவேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும்.

எலிகள் ஒய்வுநிலையில் நிம்மதியாக இருக்கும்போதும், திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெறும்போதும் அந்தப் பகுதி செல்களில் ஏற்படும் மின் அழுத்த வேறுபாடுகளை இடைவிடாது கவனித்தார்கள். ஒவ்வொரு நரம்பு செல்லும் வினாடிக்குப் பல முறை மின்துடிப்பை வெளிப்படுத்தின. தொடர்ந்து நரம்பு செல்கள் வெளிப்படுத்தும் மின்துடிப்பின் ("சுடுதல்" என்றும் சொல்வதுண்டு) எண்ணிக்கை கணக்கில்லாமல் இருப்பதால் "மல்ட்டிப்புள் டிஸ்க்ரிமினன்ட் அனலிஸஸ்" (Multiple Discriminant Analysis MDA) என்ற புள்ளியியல் கணித முறையைப் பயன்படுத்தி பரிசோதனை முறைகளை எளிமைபடுத்திக் கொண்டனர்.

இலட்சக்கணக்கில் வெளிப்படும் பரிசோதனை முடிவுகளை கணிதம் சுருக்கி வரைபடமாக வெளிப்படுத்துகிறது. முப்பரிமாண சதுர இடத்தில், நிம்மதியாக ஒய்வு நிலையில், குலுக்கி பயப்படுத்தும்போது, காற்றுவீசி அச்சுறுத்தும்போது, மேலிருந்து கீழேவிழும்போது என 4 வித சம்பவங்களில் ஹிப்போகேம்ப்பஸ் உறுப்பில் செல் கூட்டங்களில் எப்படி வேலை நடைபெறுகிறது என்பதை வரைபடத்தில் (4 பலூன்களின் அளவிலும்) ஏற்படும் மாறுபாடுகளை கவனித்தனர்.

முதன் முதலில் ஒரு அனுபவம் ஏற்படும்போது எந்தெந்த நரம்புசெல் தொகுப்புகள் எப்படி செயல்பட்டனவோ அதே தொகுப்பானது மீண்டும் அந்த சம்பவம் நடைபெறும்போது முன் நடந்துகொண்டது போலவே துடித்தன. மேலும் மறுபடி மறுபடி எப்போதெல்லாம் அந்த அனுபவம் மனத்தில் நினைவுகூறப்படுகிறதோ அப்போதெல்லாமும்கூட அதே நரம்புக்கூட்டம் அதே விதத்தில் செயல்பட்டன. இதிலிருந்து நினைவுகள் யாவும் தனித்தனி நரம்புக்கூட்டங்களின் துடிப்புகளாகச் சேமிக்கப்படுகின்றன என்பது உறுதியாகிறது.

பள்ளிக்கூடத்தில் சிறுவர் சிறுமியர்களுக்கிடையே நிறைய குழுக்கள் இருக்கும். ஒரு குழுவில் உள்ளவர்களுக்கு ஒரே மாதிரியான எண்ணங்கள் இருக்கும். அதுபோலவே மூளையில் கோடி கோடியாக நரம்பு செல்கள் இருந்தாலும் அவை தனித்தனி குழுக்களாகவே செயல்படுகின்றன. இக்குழுக்களை "கிளிக்" (Clique) என்று அழைக்கிறார்கள். அனுபவம் ஒவ்வொன்றும் மூளையில் பதியும்போதும் மீண்டும் அதை நினைவுகூறும் போதும் அதற்கான குழுவில் உள்ள செல்கள் மட்டும் ஒன்று சேர்ந்து கரஒலி எழுப்புவதுபோல் சுடுகின்றன. தனித்தனி நினைவுக்கும் அதற்கான செல் குழாத்திற்கும் காரண காரிய உறவு உள்ளது என்பதில் இப்போது எந்த சந்தேகமுமில்லை. "ஹெய்ராக்கிக்கல் கிளஸ்ட்டரிங் அனலிஸிஸ்" என்கிற புள்ளிவிவர கணக்கீடு முறையில் ஆராய்ந்தபோது இப்படிப்பட்ட நரம்புசெல் குழுக்கள் இருப்பது வெளிப்பட்டது. இந்த குழுக்கள் உதிரிகளாக இல்லாமல் செயல் அதிகார வரிசையில் அவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு இருப்பதும் தெரிய வருகிறது.

ஹிப்போக்கேம்ப்பஸ் பகுதிக்கு-மூளையின் பல்வேறு பகுதியிலிருந்தும் கண் காது முதலான புலன்களிலிருந்தும் தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். உடனே ஹிப்போகேம்ப்பஸானது பயம், கோபம், பாசம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் உறுப்பான அமிக்டலா (Amygdala) என்ற உறுப்புடன் தொடர்பு கொள்ளும். இதன் மூலம் நாம் எதைப் பார்த்தாலும், கேட்டாலும், சுவைத்தாலும், முகர்ந்தாலும் அல்லது ஸ்பரிசத்தால் உணர்ந்தாலும் உடனே அவை வெறும் தகவல்களாக அறியப்படாமல் தக்க உணர்வுகளுடன் அறியப்படுகின்றன. சில வாசனைகள் மனதுக்கு நிம்மதி தருவதும், சில வாசனைகள் பசி உணர்வைத் தருவதும் சில அருவெறுப்பு உணர்வைத் தருவதும் இதனால்தான். இப்படி நவரச உணர்வுகளின் சாயம் ஏற்றப்பட்ட பிறகே புலன் அறிவுகள் மூளையில் நினைவுகளாகப் பதிகின்றன. நினைவு என்பது நரம்பு செல்குழுக்களின் செயல்பாடுகளே என்பதில் சந்தேகமில்லை. நரம்புக் குழுக்கள் உடனுக்குடன், அந்தந்தக் கணமே மூளையில் அமைக்கப்படுவதுதான் அதிசயம்.

ஒரு முறை ஒரு நரம்புக்குழு தோன்றிவிட்டால் அதற்கப்புறம் அந்தக் குழு பிரிவதில்லை. எப்போதெல்லாம் அந்தக் குழு மின் எழுச்சி பெறுகிறதோ அப்போதெல்லாம் அதற்குரிய நினைவு எழுகிறது நம் மனத்தில் எழுகிறது. திடீரென்று இறந்துபோன ஒருவரின் ஞாபகம் ஒருவருக்கு எழுகிறது எனில் அதற்குக் காரணம் மூளையில் ஹிப்போகேம்பஸ் பகுதியில் அதற்கான நரம்புச்செல்குழு மின்துடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறது என்று அர்த்தம். வேறொரு நினைவு தோன்றினால் வேறு ஒரு குழு துடித்தெழுந்திருக்கிறது என்று பொருள். இவ்வாறு இலட்சக்கணக்கான நரம்புச்செல் குழுக்கள் தனித்தனி நினைவுகளின் பதிவுகளாகி வேண்டும்போது நமக்கு எழுப்பித் தருகின்றன. நினைவுகளை எழுப்பும் செல் குழுக்கள் மூளையில் நூலகத்தில் புத்தகங்களை பலவித பாடப் பிரிகளின்படி வரிசையாகவும், வகைப்படுத்தியும் இருப்பதுபோல நினைவு செல் குழுக்களும் திட்டமிட்ட செயல் வரிசையில் அமைந்துள்ளன.

நினைவுகளுக்கான செல் குழுக்கள் செயல்படும்போது பொது-குறிப்பு என்ற வரிசைக் கிரமத்தில் செயல்படுகின்றன. உதாரணமாக குறிப்பிட்ட நினைவுடன் வேறு பல அனுபவங்களின் நினைவுகளும் சம்மந்தப்பட்டிருக்கலாம். எப்போதெல்லாம் ஒரு நினைவு எழுகிறதோ அப்போதெல்லாம் கூடவே அதன் உபநிகழ்வுகளின் எண்ணங்களும் உடனே தோன்றுகின்றன. பொதுவான அனுபவம் ஒன்று தோன்றியவுடன் அதற்குத் தொடர்புடைய குறிப்பான அனுபவங்களும் மரத்தின் கிளைவிடுவதுபோல் உடன் தோன்றுகின்றன. இதைத்தான் மனம் ஒரு குரங்கு அது கிளைவிட்டு கிளைத்தாவும் என்று கூறுகிறார்களோ!

Brain testஉதாரணமாக தீவிபத்து, பூகம்பம், பாம்பு போன்ற மூன்று வெவ்வேறு நிகழ்ச்சிகளில் திடுக்கிடுதல் என்ற உணர்வு பொதுவாக இருக்கின்றன. இதனுடன் சம்மந்தப்பட்ட உப நிகழ்ச்சிகளிலும் சில பொதுமைகள் காணப்படலாம். இருப்பினும் ஒவ்வொன்றிற்கும் சிறப்பான அல்லது குறிப்பான நிகழ்வு ஒன்று இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. புரியவில்லை எனில் கவலைப்பட வேண்டாம். மேலும் படியுங்கள் உதாரணங்கள் உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொடுக்கும்.

நாம் வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொருவரது முகத்திற்கும் நினைவு வைத்துக் கொள்வதற்கென்று நமது மூளையில் தனித்தனி குழு இருக்கிறது. முகங்களில் எத்தனையோ முகங்கள் உள்ளன. மிருகங்களின் முகம், மனிதர்களின் முகம், சிலைகளின் முகம், கட்டிட முகப்பு, புத்தகத்தின் முகப்பு என்று பலவித முகங்கள் உள்ளன. அவை அனைத்தும் முகம் என்ற ஒரு பொது அறிவில் அடங்குகின்றன. முளையும் முகவேறுபாடு கருதாமல் "முகம்" என்ற ஒரு பொது நினைவுக்காக மட்டும் ஒரு குழுவை வைத்திருக்கிறது. இந்த குழு செயல்பட்ட பிறகே இது மனித முகம் இது மிருக முகம் என்ற பாகுபாட்டுக்கான குழுக்கள் செயல்படும். அதே அதிகார வரிசையில்தான் இதர முகங்களும் மூளையில் பதிக்கப்படுகின்றன. இப்படி படிப்படியாகச் சென்று இதன் முடிவில்தான் இன்னாருடைய முகம் என்று சரியாகக் குறிப்பிடும் அம்முகத்திற்கான தனி அடையாளக் குழு அமைகிறது. ஒவ்வொரு முறையும் அந்த முகத்தை நினைவுகூறும் போதும் அதே வரிசையில்தான் குழுக்களின் கூட்டம் செயல்படும்.

புதிதாக ஒருவரை நீங்கள் சந்திக்கும்போது அவரது முகம்- மனித முகம்- நண்பர்கள் முகம்- சுரேசின் முகம்- அவருடன் வந்த-ரமேசின் முகம் என்கிற வரிசையில் நினைவுக் குழுக்கள் பொது-குறிப்பு என்ற கிளை வரிசையில் பதிகிறது. இதன் மூலம் நாம் எத்தனை புதிய முகங்களைச் சந்தித்தாலும் அவர்களை தக்கபடி நினைவில் வைத்துக் கொள்ளமுடிகிறது. குழந்தைகளிடம் காப்பி குடிக்கும் கப்பைக்காட்டி இதுதான் "கப்" என்று ஒரு முறை அறிமுகப்படுத்திவிட்டால் போதும், அதன் பிறகு எத்தனை பாத்திரங்கள் இருந்தாலும் அவற்றில் கப் வடிவ பாத்திரங்கள் எதுவானாலும் குழந்தைகள் எளிதாக அடையாளம் கண்டு கொள்கின்றனர். இதிலிருந்து ஞாபகம் நிகழ்வது பொதுவிலிருந்து மேலும் மேலும் குறிப்பான தகவல்களை பிடித்து இழுத்து அறிவது என்பதும் தெளிவாகிறது. "நான் மறந்துவிட்டேன் முதல்வரியைச் சொன்னால் உடனே நினைவுக்கு வந்துவிடும்" என்று நாம் சொல்வது இதனால்தான்.

எலிகள் தரைக்கடியில் வளை பறித்து அதில் கிண்ணம் போல பள்ளம்பறித்து அதில்தான் படுத்து உறங்குகின்றன. குட்டிபோடுவதும் அந்தக் கிண்ணம்போன்ற பள்ளத்தில்தான். தரையில் குழிவான இடத்தைப் பார்த்தபோதெல்லாம் எலிகளின் மூளையில் "கூடு" என்று அறியும் பகுதி உடனே பளிச்சிடுகிறது. தரையில் மட்டுமல்லாமல் பள்ளமான எந்தப் பொருளைப் பார்க்க நேர்தாலும் எலிகளின் மூளையில் "கூடு" என்ற நரம்புச்செல் குழு செயல்படுவதை பார்த்தார்கள். எலி பள்ளத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும்போதே அதை அட்டையால் மூடிவிட்டால் உடனே மூளையில் "கூடு" என்பதற்கான குழு சுடுவதை நிறுத்திவிடுகிறது.

நினைவுகளின் குழு வரிசையை பிரமிடுமாதிரி கற்பனை செய்து கொள்ளலாம். பிரமிடின் அகலமான அடிப்பாகமானது பொதுவான தகவல்களின் குழுக்களாகவும் பிரமிடின் மேல் செல்லச் செல்ல மேலும் மேலும் குறிப்பான குழு செல்களின் இருப்பிடமாகவும், முடிவில் (தனி) குறிப்பிட்ட தகவலின் செல்குழு அமைகிறது. ஒரு பரிசோதனையின்போது குறிப்பிட்ட நடிகையின் முகத்தைப் பார்த்ததும் ஒருவரது மூளையில் தனியாக ஒரேஒரு நரம்புசெல் மட்டும் துடித்தது. அது முகம் என்ற குழுவரிசையின் உச்சியில் அந்த நடிகைக்கான குழுவாக இருக்கும் போலிருக்கிறது.

மறுபடியும் எலிகளுக்கே வருவோம். திடுக்கிடும் உணர்வின் பிரமிடுவில் அவ்வுணர்வின் உள் குழுக்களாகிய பூகம்பம், விழுதல், பருந்து பாய்தல் ஆகிய மூன்றும் அடங்குகின்றன. மூன்று விபரீதங்களிலும் பொதுவானது உணர்வு திடுக்கிடுவது. மூன்றும் சேர்ந்து ஒரு முப்பட்டை முக்கோணமாக அமைகிறது. மூன்று பட்டகத்திலும் அடிப்பகுதியில் பொதுவாக திடுக்கிடுதல் குழு இருக்கும். அதற்கு மேலே இரண்டுபட்டகத்தில் நிலை தடுமாறுதல் என்றும் ஒன்றில் முதுகில் காற்றுபடுதல் என்றும் இருக்கும். முடிவில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக பூகம்பம், விழுதல், கவ்விப் பிடிக்கப்படுதல் என்பதற்கான குழு இருக்கும். இதை நாம் டிஜிட்டல் குறியீடுகளாகக்கூட மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக ஒரு உணர்வை 1 என்றும் உணர்வு இல்லாவிடில் அதை 0 என்றும் குறிப்பிடலாம்.

அதன்படி பூகம்ப உணர்வை 11001 என்று குறிப்பிடலாம். எல்லாவற்றுக்கும் பொதுவாகிய திடுக்கிடலை 1 என்றும் தடுமாற்ற உணர்வை 1 என்றும் காற்றுப் படுதலை 0 என்றும் விழுதலை 0 என்றும் நிலநடுக்க உணர்வை 1 என்றும் குறிப்பிடலாம். இதுபோலவே மற்ற உணர்வுகளையும் வேறுவித டிஜிட்டல் வரிசையாகவும் வைத்துக் கொள்ளலாம். தொழில் நுட்பம் போதிய அளவு வளர்ந்ததும், எதிர்காலத்தில் ஒவ்வொருவரது நினைவுகளையும் இப்படி டிஜிட்டல் எண்மானங்களாகச் சேமித்து அடர்தட்டுகளில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். ஒவ்வொருவரும் தத்தமது நினைவுகளை டிஜிட்டல் ரூபமாக அடர்தட்டுகளில் சேமித்துக் கொள்வார்கள்.

மூளையின் மையத்தில் ஹிப்போகேம்ப்பஸ் என்று இரண்டு கொம்பு போன்ற உறுப்புகள் உள்ளன. அதில் CxCACACCA 1 என்ற பகுதியில் 200 மின்முனைகளைப் பொருத்தி அங்கு ஏற்படும் மின்துடிப்புகளை அளக்கிறார்கள். நினைவில் பதியும்போதும் நினைவு கூறும்போதும் இந்த இடங்களில் மின்துடிப்பு ஏற்படுகிறது. ஹிப்போகேம்ப்பஸ் படிப்படியாக உருப்பெருக்கி காட்டப்பட்டுள்ளது.

வண்ண விளக்குகளின் ரகசியம் | LED | scitamil.blogspot.com

Light
LED | scitamil.blogspot.com


ஒளி உமிழும் டையோடுகள் (LED) என்பவை மின்னோட்டம் பாயும்போது ஒளியை உமிழும் தன்மை உடையவை. இவை குறைமின்கடத்திகளால் ஆனவை. மின்னியல் சாதனங்களில் இந்த விளக்குகள் நீலநிற அல்லது பச்சைநிற ஒளியை உமிழ்கின்றன. பாஸ்பரஸ் பூச்சு பூசப்பட்டால் வெண்மை நிற ஒளியைத்தரக்கூடியவை. இந்த விளக்குகளில் காலியம் நைட்ரைடு (GaN) என்னும் வேதிப்பொருள் பயன்படுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்புதான் காலியம் நைட்ரைடு உருவாக்கப்பட்டது.

இரண்டு அங்குல தடிமனுள்ள விலையுயர்ந்த நீலக்கல்லில் காலியம் நைட்ரைடு சேர்மத்தை பொதிந்து வளர்க்கும் தொழில்நுட்பம் இதுவரை நடைமுறையில் இருந்தது. இதனால் இந்த விளக்குகளின் விலை மிகவும் அதிகம். ஆனால் புதிய கண்டுபிடிப்பின்படி ஆறு அங்குல தடிமனுள்ள சிலிகான் தட்டில் பத்துமடங்கு காலியம் நைட்ரைடு சேர்மத்தை வளர்க்க முடியும். சிலிகான் விலைகுறைவான தனிமம் என்பதால் உற்பத்தி செலவு பத்தில் ஒரு பங்காக குறையும் வாய்ப்பு இருக்கிறது.

ஒளிஉமிழும் டையோடுகளை குறைந்தசெலவில் தயாரிக்கும் தொழில்நுட்பம் தற்போது கண்டறியப்பட்டுள்ளதால் இன்னும் ஐந்தாண்டுகளில் விளக்குகளுக்கான மின்கட்டணத்தில் முக்கால்பங்கு சேமிக்கலாம் என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் காலின் ஹம்ப்ரிஸ்.

ஒளி உமிழும் டையோடுகளின் விலை பத்தில் ஒரு பங்காக குறையும்போது ஒளி உமிழும் டையோடுகளைப் பயன்படுத்திய விளக்குகளின் விற்பனை நிச்சயமாக அதிகரிக்கும். விளைவாக, நமது மின்கட்டணத்தில் முக்கால் பங்கு குறைந்துபோகும் என்கிறார் காலின் ஹம்ப்ரிஸ்.

அதாவது மின்சார உபயோகத்தில் நான்கில் ஒருபங்கு சிக்கனம் ஏற்படுமாம். இப்போது உள்ள மின் உற்பத்தி நிலையங்களைக்கூட மூடவேண்டி வருமாம். நம்முடைய மின்வெட்டு அமைச்சருக்கு இது நிச்சயம் நல்ல செய்திதான். ஆனால் இந்தக்கனவு நனவாவதற்கு அவர் ஐந்து வருடங்கள் காத்திருக்கவேண்டுமே! யாருக்கு அந்த யோகம் அடிக்கப்போகிறது என்பதுதான் தெரியவில்லை.

காலியம் நைட்ரைடு சேர்மத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு ஒளி உமிழும் டையோடு விளக்கு ஒரு லட்சம் மணிநேரத்திற்கு எரியக்கூடியது. அதாவது 60 ஆண்டுகள் வரை தொடர்ந்து அந்த விளக்கு எரியும். இவற்றில் பாதரசம் இல்லை. எனவே சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்தும் சிக்கலும் இல்லை. மேலும் காலியம் நைட்ரைடு ஒளி உமிழும் விளக்குகளை தேவைப்படும்போது பிரகாசமாகவோ, மங்கலாகவோ எரியச்செய்துகொள்ளலாம்.

மனம் என்பது என்ன? | scitamil.blogspot.com

Brain
Mind | scitamil.blogspot.com
அதிகாலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, நெற்றிக்கு இட்டுக்கொண்டு, நேற்று பாதியில் நிறுத்திவிட்ட பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கிறார் நமது நண்பர் முருகன். இந்த வேலைகளை செய்வதற்கு அவரது கண்கள் முதலான ஐம்புலன்களும் கால் கை முதலான உடல் கருவிகளும் உதவுகின்றன. கண் முதலான கருவிகளை அறிவுக் கருவிகள் என்றும் கை முதலான கருவிகளை செய்கருவிகள் என்றும் நாம் அழைக்கலாம். இவை யாவும் முருகனின் உடம்புக்கு வெளியே நிகழும் செயல்களுக்குக் காரணமாக உள்ளன. ஆதலால் இவற்றைப் புறக் கருவிகள் என்று அழைப்பது வழக்கம்.
முருகனின் செயல்களுக்கெல்லாம் புறக்கருவிகள் மட்டுமே காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இவை வேலைகளைச் செய்வதற்கு முன்பு முருகனுக்குள்ளே, அவனது மூளையில் எண்ணங்கள் உருவாக வேண்டுமல்லவா? அந்த எண்ணங்களின் தொகுப்பைத்தான் நாம் பொதுவாக மனம் என்று குறிப்பிடுகிறோம். மனமானது உள்ளிருந்தபடி செயல்படுவதால்தான் முருகனின் உடல் வெளியிருந்தபடி செயல்படுகிறது. ஆதலால் மனத்தொகுப்பை அகக் கருவி என்று சொல்கிறார்கள்.

கண்முதலான அறிவுக்கருவிகளையும், கை முதலான செய் கருவிகளையும் புறக்கருவிகள் என்றும் மனத்தை அகக்கருவி என்றும் வகைபடுத்துகிறோம். மனம் என்ற அகக்கருவியை மனம், புத்தி, அகங்காரம், சித்தம், என்று விரித்து நான்காவும் சொல்லலாம். மனம் என்று ஒரு பொதுச் சொல்லலும் அழைக்கலாம். மனத்தை ஒரு பொருளாகக் கொள்ளாமல் மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்று நான்காக விரித்து அழைப்பதற்குக் காரணம் இருக்கிறது. மனம் செயல்படும் விதத்திலிருந்து இப்படி நால்வகை பிரிவுகளை அறிய முடிகிறது. மேலை நாட்டு விஞ்ஞானமும் உளவியலும் மனத்தை இப்படி பாகுபடுத்தி அறிய முற்படுவதில்லை. இந்திய சித்தாங்களில் மட்டுமே இது போன்ற விரிவான விளக்கங்கள் காணப்படுகின்றன.

கண்கள் காண்பதை காது அறிவதில்லை. அதுபோலவே காது அறிந்ததை கண்களோ நாக்கோ அறிவதில்லை. எனவே அறிவுக்கருவிகளாகிய இவை வெறும் கேமரா, மைக் போன்ற சாதனங்களே ஒழிய கண்டதையோ உண்டதையோ கேட்டதையோ தாமாக அறிவதில்லை. மூளையில் இவற்றிற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இவற்றிலிருந்து வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் உணர்வுகளாக மாற்றப்பட்டு மனம் என்ற கருவியாலேயே அறியப்படுகிறது. மனமானது ஐந்து புலன்களிலிருந்தும் வரும் தகவல்களை ஒருங்கிணைத்து அறிகிறது. மனத்தின் வேலை தகவல்களை ஒருங்கிணைப்பதாக இருந்தாலும் அதனால் கண்டதையோ கேட்டதையோ இன்னதென்று அறிவதற்கு அது புத்தியின் துணை வேண்டும்.

புத்தி என்பது கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் போன்றது. அதில் பிறந்தது முதல் கண் காது முதலான அறிகருவிகள் மூலம் அறிந்தது, அனுபவத்தால் கற்றது, பள்ளிக்கூடத்தில் பயின்றது ஆகிய அனைத்தையும் பதித்து வைத்துக்கொண்டுள்ளது. மனித மூளையின் செரிபிரல் கார்ட்டெக்ஸின் பெரும்பகுதி இந்தத் தகவல்களுக்காகத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தியில் தகவல்களைப் பதிக்கும் வேலையை மூளையின் மையத்தில் இரு பக்கவாட்டிலுமுள்ள ஹிப்போகேம்ப்பஸ் என்ற எழுத்தாணிதான் செய்கிறது.

மனமானது புத்தியின் உதவியுடன் கருவிகள் மூலம் அறிந்ததை இன்னது என்று தெளிகிறது. மனத்தை நாம் கம்ப்யூட்டரின் ரேம் நினைவாகக் கொள்ளலாம். தற்காலிக நினைவு மட்டுமே மனத்தில் இருக்கும். அவை நிரந்தரமாக்கப்படவேண்டுமாயின் புத்தியில் அவை பதிந்தாக வேண்டும். சித்தம் என்பது சிந்திக்கும் வேலையைச் செய்யும் அகக்கருவி. புத்தி வெறும் நினைவகமாக இருப்பதால் அது கோப்புகளை சேமித்து வைக்கும் கிடங்கு என்றுதான் கொள்ளவேண்டும். எனவே சித்தம் எனும் அகக்கருவி மனத்தினால் அறிந்ததை புத்தியின் கண் உள்ள தகவலின் அடிப்படையில் இது இப்படித்தான் என்று நிச்சயிக்கும் வேலையையும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் செயலையும்; இப்படி செய்யலாம் என்று திட்டம் போடும் வேலையையும் செய்கிறது.

மனம் அறிந்ததை சித்தமானது புத்தியின் உதவியால் நிச்சயம் செய்கிறது என்பதை அறிந்தோம். இத்தனை செயலும் யாருக்காக எனில் அது ஆங்காரம் எனப்படும் இன்னொரு அகக்கருவியின் பயனுக்காகவாம். ஆங்காரம் அல்லது அகங்காரம் இல்லாமல் மனமோ புத்தியோ சித்தமோ செயல்பட்டுப் பயனில்லை. கம்ப்யூட்டரில் புத்திக்கு நிகரான திட நினைவகம் இருந்தும், மனத்திற்கு நிகரான ரேண்டம் அக்சஸ் நினைவு இருந்தும், சித்தத்திற்கு நிகரான மென் பொருட்கள் செயல்பட்டாலும் அதில் ஆங்காரம் எனும் அங்கம் இல்லாதால் கம்ப்யூட்டர் என்ன செய்தாலும் அதன் பயனை அது அனுபவிக்க முடியாமல் போகிறது. மனம், புத்தி, சித்தம், என்ற மூன்று உறுப்புகளை கம்ப்யூட்டர் பெற்றிருந்தாலும் அதற்கு ஆங்காரம் எனப்படும் "நானிருக்கிறேன், என்னுடையது" போன்ற செயல்கள் இல்லாததால் அது சடக் கருவியாகவே உள்ளது.

இன்றைய நவீன உளவியலும் நரம்பியலும் சேர்ந்து மூளையின் செயல்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் மனம் புத்தி சித்தம் ஆங்காரம் என்று வேறுபடுத்தி ஆராயாவிட்டாலும் மேற்கூறிய பகுதிகளை வேறு பெயர்களில் சுட்டிக்காட்டியபடி இருக்கிறார்கள். ஆங்காரம் என்பதை அவர்கள் கான்சியஸ் என்று அழைக்கிறார்கள். கான்சியஸானது மூளையில் எப்படி உருவாகிறது என்பதில் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. புத்தி எனும் பகுதியை மெமொரி என்று அழைக்கிறார்கள். மனம் என்பதை மென்ட்டல் ஆக்டிவிட்டி என்றும் வெறுமனே மைன்ட் என்றும் அழைக்கிறார்கள். சித்தம் என்பதை 'தாட்' என்று சொல்கிறார்கள்.

உயிரியல், நரம்பியல், மற்றும் உளவியல் வல்லுநர்கள் மனத்தை மூளையின் செயல்களினால் ஏற்படும் ஒரு நிகழ்வதாக கருதி மூளை நரம்பமைப்பின் அடிப்படையில் மனத்தை விளக்குகிறார்கள். இதை நியூரல் கோரிலேட்ஸ் ஆஃப் கான்சியஸ்னஸ் என்று அழைக்கிறார்கள். மனமானது மூளையில்தான் தோன்றி செயல்படுகிறது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. மூளையில் அடிபட்டால் மனம் கலக்கமடைவதை நாம் அறிகிறோம். மனத்தில் ஏற்படும் சித்தக் கோளாறுகளுக்கு மூளையில் செயல்படும் மருந்தைத்தான் பயன்படுத்துகிறோம். மூளையைச் சரிசெய்தால் மனம் சரியாவதை அறிகிறோம். மூளையை பாதிக்கும் கள் சாராயம் மற்றும் லாகிரிப் பொருட்கள் மனத்தையே பாதிக்கின்றன என்பதையும் நாம் அறிவோம். எனவே சுருங்கச் சொல்லவேண்டுமாயின் மனமும் மூளையும் ஒன்றே. மூளை கருவி என்றால் மனம் அதன் செயலாகும்.

இது இப்படியிருக்க சித்தாந்திகள் மனத்தை மூளையிலிருந்து பிரித்து சுதந்திரமாகவும் தனியாகவும் செயல்படும் கருவியாக வைக்கிறார்கள். மனிதன் இறந்து அவன் உடல் மண்ணில் மறைந்த பிறகும் மனமானது சூக்கும வடிவத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்று சொல்கிறார்கள. இந்த இடத்தில் அறிவியலும் ஆன்மிகமும் முறண்பட்டுக் கொள்கின்றன. மனமானது மூளையிலிருந்து பிரிக்க முடியாதது என்று அறிவியல் சொல்ல, ஆன்மிகமோ மூளையிலிருந்து தனித்தும் மனம் செயல்படும் என்று சொல்கிறது. அறிவியல் தன் கருத்தை வலியுறுத்த ஏராளமான ஆதாரங்களை முன்வைக்கிறது. ஆனால் ஆன்மிகமோ சித்தர்களின் சொல் ஒன்றையே ஆதாரமாகக் கொள்கிறது. வேறு நேரடியான காட்சி ஆதாரம் அதனிடம் இல்லை. அறிவியல் ஆய்வாளர்கள் மேலும் ஆராய்ச்சி செய்தால் ஆன்மிகம் சொல்வது உண்மையா இல்லையா என்பது வெளிப்படும்.

அறிவியல்கூட மூளை என்ற சடப்பொருளிலிருந்து எப்படி மனம் என்கிற உணர்வு எழும்புகிறது என்பதற்கு சரியான விளக்கங்களைத் தரவில்லை. அவர்களும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். மூளையின் செயலும் கம்ப்யூட்டரின் செயலும் அடிப்படையில் ஒன்றுபோலவே இருக்கின்றன. இரண்டிலும் மின்சாரம்தான் செயல்படும் சக்தியாக இருந்துவருகிறது. நரம்பில் மின்சாரம் பாய்வதுபோல கம்ப்யூட்டரின் சிப்பத்திலும் மின்சாரமே பாய்ந்து வேலைகளை செய்கிறது. அப்படியானால் மூளையில் மனம் எனும் உணர்வு எழுவது போல கம்ப்யூட்டரிலும் ஒரு உணர்வு எழுந்தாக வேண்டும்.

வருங்காலத்தில் மனிதர்கள் கம்ப்யூட்டரை மனித நியூரான்களுக்கு நிகராகச் செயல்படும்படி வைத்துவிட்டார்களானால் அப்போது மனம் என்ற உணர்வு கம்ப்யூட்டருக்கு ஏற்படலாம். ரோகர் பென்ரோஸ் போன்ற தலை சிறந்த கணித கணிணி மேதைகள் மனிதனால் கம்ப்யூட்டருக்கு மூளையின் செயலைப்போன்ற மென்பொருளை வழங்கவே முடியாது என்று உறுதியுடன் இருக்கிறார்கள்.

மூளையின் செயல்பாட்டைப்போல கம்ப்யூட்டரால் ஒருக்காலும் செய்யவோ செய்விக்கவோ முடியாது என்று நிச்சயமாக நம்புகிறார்கள். ஒருவேளை சித்தாந்திகள் கூறுவதுபோல மூளை வெறும் கருவி மாத்திரம்தனோ; அதில் மனம் எனும் வேறு ஒரு சக்தி நுழைந்து அதை ஆட்டுவிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படி மனமானது மூளைக்கு வேறான சக்தி என்றால் ஏன் பிறந்தபோதே அது முழுவீச்சில் செயல்படாமல் வயதுக்கேற்ப, மூளை வளர்ச்சிக்கெற்ப அதுவும் வளருகிறது? மூளைக்கு வெளியிலிருந்து செயல்படும் ஒரு சக்தி மூளையை வாகனமாகப் பயன்படுத்துமேயானால் அது வாகனத்தின் வளர்ச்சியை நம்பியிருக்கக்கூடாது. என்று வாதிடத் தோன்றுகிறது. ஒரு வேளை மூளை மெள்ள முதிர்வடைவதால்தான் மனத்தின் செயலும் மெள்ள முதிர்வடைவது போலத் தெரிகிறதோ என்றும் வாதிடலாம். இந்த வாத விவாதங்கள் பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் நிகழ்ந்தபடி இருக்கிறது. முடிவு என்று வருமோ தெரியவில்லை.

இந்தியாவில் அணுசக்தி திட்டங்கள் | scitamil.blogspot.com

இந்திய அணுசக்தித் திட்டம்
அணுசக்தியை எந்த நாளிலும் அழிவு வேலைகளுக்குப் பயன்படுத்த மாட்டோம். அதை ஆக்க வேலைகளுக்கும், சமாதானப் பணிகளுக்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்று திடமான உறுதியான ஓர் அணுக் கொள்கையைக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு நாடு இந்தியா.
அணு ஆராய்ச்சியோ, அணுசக்தி நிலையங்களோ, அதையொட்டிய திட்டங்களோ, அனைத்தும் சமாதானத்தையே இலட்சியமாகக் கொண்டவைகளே அன்றி வேறு எந்த அழிவு நோக்கத்தையும் இலட்சியமாகக் கொண்டதல்ல என்று மீண்டும் மீண்டும் அடித்துக் கூறி வந்த ஒரு நாடு இந்தியா.
அதோடு உலகம் பூராவும் சமாதானத்தைப் பரப்புவதையே இலட்சியமாகக் கொண்ட சமாதானப் புறாவையே முதல் பிரதமராகவும் கொண்டிருந்த ஒரு நாடு இந்தியா.
இந்த நாடு 1947 சுதந்திரத்துக்குப் பின் ஒவ்வொரு துறையிலும் சுயமான வளர்ச்சியை நோக்கி முன்னேறி எல்லா துறையிலும் தன்னிறைவு பெறுவதற்கான பல திட்டங்களைத் தீட்டியது. இவ்வாறே தனது அணுசக்திக் கொள்கைக்கேற்ப அணுசக்தித் துறையிலும் முன்னேற திட்டங்கள் தீட்டப்பட்டன.
1960 ஆண்டு, அதாவது சுதந்திரம் பெற்று 13 ஆண்டுகள் கழித்து இந்திய அணுசக்திக் கமிஷன், திட்டக் கமிஷனுக்கு ஒரு வடிவமைப்பைத் தந்தது. இதன்படி இந்தியாவில் அணு சக்திக்காக எங்கெங்கே என்னென்ன வளங்கள் உள்ளன, அதையொட்டி எங்கெங்கே அணுசக்தி நிலையங்கள் நிறுவலாம் என்று ஆலோசனை வழங்கியது.
கூடவே இப்படி நிறுவப்படும் அணுசக்தி மூலம் கிடைக்கும் அணுமின் சக்தி, இதர அனல், புனல் மின் நிலையங்கள் மூலம் பெறப்படும் மின்சக்திக்கு இணையாக உற்பத்திச் செலவு ஏறக்குறைய ஒரே சமமாயிருக்கும் என்பதையும் அது சுட்டிக் காட்டியது.
எனவே, திட்டக் கமிஷன், அணுசக்திக் கமிஷனின் ஆலோசனையை ஏற்று, அதன்படி அரசுக்கு சிபாரிசு செய்து நாட்டில் அணுசக்தி நிலையங்கள் நிறுவ ஏற்பாடு செய்தது.
இப்படி அணுசக்தி நிலையங்களை நிறுவ, அரசு தெம்போடு அங்கீகாரம் அளித்ததற்கு முக்கியமான காரணங்கள் பல.
1) இந்தியாவில் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (Tata Institute of Fundamental Research - TIFR) பணியாற்றிப் பயிற்சி பெற்ற திறமையும் ஆர்வமும் மிக்க விஞ்ஞானிகள் இருந்தார்கள்.
இவர்கள் ஏற்கெனவே அணுசக்தி பற்றி, அணு உலைகள் பற்றி சொந்தமாகப் பல ஆராய்ச்சிகள் செய்து இரண்டு சோதனை உலைகளையும் நிறுவியிருந்தார்கள். ஓர் உலை அப்சரா (APSARA) . இன்னொன்று ஜெர்லினா (ZERLINA) .இத்துடன் கனடா தொழில்நுட்பக் கூட்டுடன் சைரஸ் (CIRUS) என்கிற உலையையும் நிறுவியிருந்தார்கள். எனவே, இது அணுசக்தித் தொழிலுக்குப் போதுமான தொழில் நுட்பத்தையும், தொழில் நுட்பம் தெரிந்த விஞ்ஞானிகளையும் பெறுவதற்கான நம்பிக்கை அளித்தது.
2) பீஹார் மாநிலத்தில் ஜடுகுடா பகுதியில் யுரேனியப் படிவுகளும், கேரள மாநிலத்தில் மோனசைட் மணல் பகுதியில் தோரியப் படிவுகளும் ஏராளமான அளவில் படிந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. இது அணு உலைகளுக்கான எரிபொருள் பிரச்சினையைத் தீர்ப்பதாக இருந்தது.
3) அப்போதைய சூழ்நிலையில், அதாவது இந்திய மண்ணில் புதைந்துள்ள நிலக்கரி மற்றும் எண்ணெய் வளங்கள் முழுதாக ஆராயப்படாமலும், கண்டுபிடிக்கப்படாமலும் இருந்த சூழ்நிலையில் இந்த இயற்கை வளங்கள் இன்னும் 20, 25 ஆண்டுகளுக்குத்தான் வரும் என்று அணுசக்திக் கமிஷன் கூறியிருந்தது. எனவே மாற்று வழிகளில் சக்தியைத் தேடும் அவசியமும் அந்த மாற்று அணுசக்தியைத் தவிர வேறெதுவும் இல்லை எனவும் நம்பப்பட்டது.
4) ஆற்றல் தயாரிப்புக்கு இதர நிலக்கரி, பெட்ரோல், டீசல் எரிபொருள்களைவிட அணு ஆற்றலுக்கு மிகக் குறைவான எரிபொருளே தேவைப்பட்டது. (1 கிலோ யுரேனியம் - 2000 டன் நிலக்கரிக்கு சமம் இல்லையா). எனவே இது எரிபொருள் சிக்கனத்துக்கு வழி கோலும் எனச் சொல்லப்பட்டது.
5) அப்போதைய சூழ்நிலையில் சுதந்திர இந்தியாவின் ‘சுயமான தொழில் வளர்ச்சிப் போக்கிற்கு’ அனல், புனல் நிலையங்கள் மூலம் கிடைத்த மின் சக்தி போதுமானதாக இல்லாமல் பற்றாக்குறையாக இருந்தது. எனவே இந்த வளர்ச்சிக்கு அதிகமான மின்சக்தியும் தேவைப்பட்டது.
இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களால் ‘சமாதான காரியங்களுக்கே அணுசக்தியைப் பயன்படுத்தும் கொள்கை கொண்ட இந்தியா அணுசக்தி நிலையங்கள் அமைக்க திட்டங்கள் தீட்டியது.
இத்திட்டம் மூன்றுவித படிநிலை வளர்ச்சிகளைக் கொண்டதாக இருக்கும் என்று சொல்லப்பட்டது.
படி ஒன்று : இது இயற்கை யுரேனியத்தை எரிபொருளாகக் கொண்ட கனநீரை முறைப்படுத்தியாகப் பயன்படுத்தும் அணு உலைகளைக் கொண்டதாக இருக்கும். இவ்வுலைகளின் கழிவுகளிலிருந்து அதிகமான அளவு புளூட்டோனியம் கிடைக்கும். இப்புளூட்டோனியத்தைக் கொண்டு அதை எரிபொருளாகப் பயன்படுத்தும் பரிசோதனை வேக ஈனுலைகளும் இதே காலத்தில் நிறுவப்படும். இது 1970 - 80 ஆண்டுக்காலப் பகுதிகளில் செயல்படுத்தப்படும்.
படி இரண்டு : இது மேற்கூறிய இயற்கை யுரேனிய எரிபொருள் உலைகளிலிருந்தும், பரிசோதனை வேக ஈனுலை களிலிருந்தும் பெறப்படும் தோரியத்தைக் கதிரியக்கமூலமாக வேக ஈனுலைகளில் யுரேனியம் - 233ஐ ஈனுவதாக அதை எரிபொருளாகப் பயன்படுத்துவதாக இருக்கும். கூடவே, மேற்கூறிய இரு வகை அணு உலைகளின் அனுபவமும் தோரியம் சுழற்சியைப் பிரதானமாகக் கொண்டதாக அமையும் வகையில் சோதனை உலைகளும் நிறுவப்படும். இது 1980 - 85 காலப் பகுதியில் செயல்படுத்தப்படும்.
படி மூன்று : இது 1985ஐத் தாண்டிய காலப் பகுதியைக் கொண்டதாக இருக்கும். இக்காலப் பகுதியில் நான்கு வகையான அணு உலைகள் செயல்பாட்டில் இருக்கும். 1. இயற்கை யுரேனிய எரிபொருள் அணு உலை. 2. முன்னேறிய அணு உலை, 3. புளூட்டோனிய எரிபொருளைக் கொண்ட வேக ஈனுலை, 4. தோரியம் சுழற்சியைப் பயன்படுத்தும் ஈனுலை.
ஆகவே இவ்வாறாக இந்திய அணுசக்தி வளர்ச்சி, அதாவது சமாதானப் பணிகளுக்கான அணுசக்தி வளர்ச்சி இருக்கும் என்று திட்டமிடப்பட்டது அல்லது எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்தத் திட்டம் எந்த அளவுக்கு நிறைவேறியது. இடையில் இந்தத் திட்டத்திற்கு நேர்ந்த கேடு அல்லது இடையூறு என்ன? இந்தியாவின் அணுசக்திக் கொள்கை என்ன ஆயிற்று என்பதெல்லாம் மிகவும் சுவாரஸ்யமான திகைப்பூட்டும் விஷயங்கள். இதுபற்றி பின்னால் பார்ப்போம்.
அதற்கு முன் இந்தத் திட்டத்தில் நிறைவேறிய அணுமின் நிலையங்கள் எவை எவை? அவை எங்கெங்கு நிறுவப்பட்டு எவ்வாறு செயல்படுகின்றன என்று பார்த்துக் கொண்டு மேலே செல்வோம்.
முதல் அணுமின் நிலையம்
இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் சர்வதேச முட்டாள்கள் தினத்தன்று, அதாவது 1969 ஏப்ரல் முதல் தேதியன்று செயல்படத் துவங்கியது. இது மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்குக் கடற்கரை யோரத்தில் பம்பாய்க்கு வடக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் தாராபூருக்கு அருகில் அமைந்துள்ளது. எனவே இது தாராபூர் அணுசக்தி நிலையம் என அழைக்கப்படுகிறது.
இது ஏற்கெனவே இந்திய அரசு திட்டமிட்ட, இந்திய விஞ்ஞானிகள் வடிவமைத்த அப்சரா முறையோ, ஜெரிலினோ முறையோ, அல்லது கனடத் தொழில்நுட்பக் கூட்டுடன் அமைந்த சைரஸ் முறையோ அல்லாமல் முற்றிலும் மாறுபட்டு, அமெரிக்காவிடமிருந்து கடன் வாங்கிப் பெறப்பட்ட அணு உலைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. இந்நிலையத்தில் உள்ள இரண்டு உலைகளும் ஒவ் வொன்றும் 190 மெ.வா. உற்பத்தித் திறன் கொண்டவை.
இதற்கான, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான இரு தரப்பு பரஸ்பர ஒப்பந்தம், 1963 ஆகஸ்டு 8இல் போடப்பட்டது. ஒப்பந்த அடிப்படைகள் பற்றியதாக இது கையெழுத்திடப் பட்டாலும், உண்மையாக தாராபூர் அணு உலைக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளை அமெரிக்க அணுசக்திக் கமிஷன் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கான ஷரத்துகள் அடங்கிய ஒப்பந்தம் 1966 மே 17இல் கையெழுத்தாகியது.
இந்த ஷரத்துகளில் மிகவும் முக்கியமானது தாராபூர் அணு மின் நிலையம் எவ்வளவு காலம் இயங்குகிறதோ அவ்வளவு காலத்துக்கும் அமெரிக்கா செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எரிபொருளாக இந்த நிலையத்துக்கு விற்பனை செய்யும் என்பதாகும்.
இந்நிலையம் தன் மின் உற்பத்தியை ஏப்ரலில் துவங்கினாலும், முழுமையான உற்பத்தி அக்டோபரில்தான் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அக்டோபர் கடந்து ஒரு ஆண்டுகாலம் ஆகியும் உற்பத்தி முழுமையாகக் கிடைக்கவில்லை. 1970 நவம்பர் வாக்கில்தான் நிலையம் ஓரளவு முழுமையாகச் செயல்படத் துவங்கியது. அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் வரை 1970 - 76க்குள் மிகப் பெரியதும் சிறியதுமான 242 மாற்றங்கள் அணு உலையில் செய்யப்பட்டன. மிக மோசமான தொழில் நுட்பம் கொண்ட இவ்வணு உலையை எப்படியாவது இயங்க வைக்க வேண்டும் என 1977 வாக்கில் மேலும் 58 மாற்றங்கள் செய்யப்பட்டன.
இவ்வளவுக்குப் பிறகும் 1980ஆம் ஆண்டு வாக்கில் உலையில் ஏற்பட்ட ஒரு கசிவினால் அபாயகரமான கதிரியக்கம் வெளிப்பட்டது. இது மிகச் சாதாரண சிறிய கசிவே என்று மூடி மறைக்கப்பட்டது.
தாராபூர் அணுமின் நிலையத்தில் வெளிப்படும் கதிரியக்க அளவு, வரையறுக்கப்பட்ட அளவைவிட மீறியிருப்பதாகவும், அணுமின் நிலையத்தைத் தாண்டி 40 முதல் 50 கி.மீ. தூரம் வரை, அதன் கதிரியக்கம் பரவியிருப்பதாகவும் சொல்லப் படுகிறது.
1972இல் நடந்த ஒரு சிறு விபத்தில் இரண்டு எஞ்சினியர்கள் அணு நிலையத்திலேயே இறந்திருக்கிறார்கள். ஒருவர் அபாயகரமான நிலைக்கு ஆளாகிப் பின் சிகிச்சைக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டு அங்கேயே இறந்திருக்கிறார். ஆனால் இது விபரம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படவில்லை.
இந்நிலையத்தில் 1974 - 78க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட 5 ரெம் அளவையும் தாண்டி அதிகமான கதிர் வீச்சுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
1975 ஓர் ஆண்டில் மட்டும் இப்படிப்பட்ட அளவைத் தாண்டியவர்கள் 190 பேர் என, கதிரியக்க அளவைத் தாண்டும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அணு உலை மாதிரி, கொதிநீர் அணு உலை வகை (Boiling Water Reactor - BWR) எனப்படுகிறது.
இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏற்ற அணு உலை, கனடா கன நீர் அணு உலைதான் என்றும் (Canadian Heavy Water Reactor, இது சுருக்கமாக CANDU என அழைக்கப்படுகிறது) , இதில் இயற்கை யுரேனியத்தை அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள்.
அப்படியிருந்தும், மாறாக அமெரிக்காவின் கெடுபிடி நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த வெற்றிகரமாகச் செயல்படாத BWR உலையைத் தாராபூரில் நிறுவியதற்காக, இந்திய அணு ஆய்வுச் சுதந்திரத்தையே அப்போதைய அணு சக்திக் கமிஷன் தலைவர் பாபா அமெரிக்காவுக்கு அடகு வைத்துவிட்டார் என்று பரவலாக, ‘பாபா’ மேல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.
காரணம், BWR ஒரு பாதுகாப்பான, முழுமையான தொழில் நுட்பம் நிறைந்த உலை இல்லையென்றும், இது அமெரிக்காவில் பரீட்சார்த்தமாகச் சோதிக்கப்பட்டு, பின் பல இடங்களில் நிறுவ திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் பரீட்சார்த்த சோதனைகளில் இது நம்பிக்கை அளிக்காததால், அமெரிக்காவிலேயே திட்டமிட்டப்படி இது ஓர் இடத்தில் கூட நிறுவப்படவில்லை என்றும் அதற்குள் பாபா அவசரப்பட்டு 1960லேயே இந்த ஒப்பந்தத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார் என்றும், பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Baba Atomic Research Centre) மூத்த விஞ்ஞானி ஒருவரே கூறியிருக்கிறார்.
அதோடு அமெரிக்கா இதுவரை 564 மெ.வா. உற்பத்தித் திறனைவிட, உற்பத்தியின் திறன் குறைவாக உள்ள ஓர் உலையைக்கூட எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்ததில்லை எனவும் இந்த உலையில் ஏற்பட்ட பரீட்சார்த்த தோல்வி காரணமாகவே இதை நம் தலையில் கட்டிவிட்டது எனவும் இந்நிலையில் அமெரிக்கா இப்படி இதை நம் தலையில் கட்டவும் பாபாவே காரணமாக இருந்தார் என்பதும் பாபா மேல் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்கு மற்றொரு காரணம்.
இப்படிப்பட்ட தோல்விகரமான அணு உலையைத்தான் ‘வேலியில் கிடப்பதை எடுத்துக் காதில் விட்டுக் கொண்டு குடைகிறது, குடைகிறது என்பது போல்’ நம் நாட்டில் இறக்குமதி செய்து வைத்துக் கொண்டு, தினம் தினம் நம் மக்கள் கதிர்வீச்சு அபாயத்துக்குள்ளாகிக் கொண்டும் செத்துக் கொண்டும் இருக்க வழி வகுத்திருக்கிறார்கள்.இதற்கான திட்டச் செலவு 1962இல் 48 கோடியாக இருந்து, 1970இல் 68 கோடியாக மாற்றம் பெற்று, 1981இல் இது 97.12 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது 97,12,00,000 ரூபாய். இப்போது இது இன்னும் பல மடங்கு கூடியிருக்கும்.
ராஜஸ்தான் அணுமின் நிலையம்
இது ராஜஸ்தான் மாநிலத்தில் கோடாவுக்கு அருகில் ராணா பிரதாப் சாஹர் என்ற இடத்தில் உள்ளது. எனவே ராஜஸ்தான் அணுசக்தி நிலையம் (RAPS) என அழைக்கப் படுகிறது. இங்கு நிறுவப்பட்டுள்ள இரண்டு அணு உலைகள் ஒவ்வொன்றும் 190 மெ.வா. உற்பத்தித் திறன் கொண்டவை. முதல் உலை ஆகஸ்டு 1972லும், இரண்டாவது உலை ஜூன் 1976 லும் செயல்படத் தொடங்கியது.
ஏற்கெனவே அமெரிக்க உதவாக்கரை அணு உலையைத் தாராபூரில் நிறுவிய அனுபவமோ, என்னவோ, மீண்டும் அந்த வம்புக்குப் போகாமல், கனட நாட்டுத் தொழில் நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட (CANDU) முறை அணு உலை இங்கு நிறுவப்பட்டது. இது அழுத்தம் நிறைந்த கனநீர் உலை (Pressurised Heavy Water Reactor - PHWR) என அழைக்கப்படுகிறது. மிகவும் சிக்கனமானது, பாதுகாப்பானது என்று கருதப்பட்ட இந்த உலையும் சும்மா இல்லை. இதன் முதன் உலை நிறுவப் பட்ட 10 ஆண்டுகளுக்குள் கடும் சேதத்துக்குள்ளாகியது.
10 ஆண்டு என்பது நீண்டகாலப் பகுதியானாலும் இதற்காக கொட்டிய பணத்தையும், நிறுவ எடுத்துக் கொண்ட காலப் பகுதியையும் பார்த்தால் இந்த 10 ஆண்டு என்பது மிக அற்பமே. வெறும் 10 ஆண்டு உற்பத்திக்கா இவ்வளவு பணமும், இவ்வளவு உழைப்பையும் செலவிட்டு நிறுவுவது என்று தோன்றும். ஆக இதுவும் சேதத்துக்குள்ளாகியது. பிறகு அதையடுத்து 1982 மார்ச் 4இல் அணு உலைக் கவசத்தில் மென்னீர் கசிவு காரணமாக செயல் முடக்கம் செய்யப்பட்டது.
இந்தக் கசிவு அபாயகரமான கதிரியக்கம் கொண்டதாக இருந்ததால் மனிதர்கள் கிட்டே நெருங்க முடியாத நிலையில் இருந்தது. தொலைக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் (Remote Control) கசிவை அடைக்கும் வசதியும் இல்லை. கடுமையான வேறு பல முறைகளைக் கையாண்டு பல மணி நேரம் போராடி கசிசை அடைக்க முனைந்தார்கள். இதன் விளைவாக என்ஜினியர்களும் தொழிலாளர்களுமாக சுமார் 2,000 பேருக்குமேல் கடுமையான கதிரியக்கத்துக்கு ஆளானார்கள். 300 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்கள்.
இது தவிர இக்கசிவால் சுற்றுப்புறத்தில் எவ்வளவு கதிரியக்கம் பரவியது, சுற்றுச் சூழலில் எவ்வளவு மாசு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இது பற்றி அணுசக்தித் துறை எதுவுமே மூச்சு விடவில்லை. மேலை நாடுகள் போல் இதுபற்றி ஆய்வுகள் நடத்த தனிப்பட்ட ஆய்வு அமைப்புகளும் இந்தியாவில் இல்லை.
இந்நிலையில் அணு உலையில் ஏற்பட்ட தொடர்ந்த இடையூறு காரணமாக 1985 மே 20இல் இந்த உலை நிரந்தரமாக மூடப்பட்டது.
1981 செப்டம்பர் 27இல் இரண்டாவது உலையில் வெப்ப மாற்றுக் குழாயில் கசிவு ஏற்பட்டது. இது குழாயின் தரக் கேடான தயாரிப்பு காரணமாக ஏற்பட்டதாக அறியப்பட்டது. இதனால் அபாயகரமான கதிரியக்கம் வெளிப்பட்டது. இதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் ஏதும் தெரியவில்லை.
ஆக, கனடா நாட்டுத் தொழில் நுட்ப அணு உலையும் கையை விரித்து விட்டது. அதுவும் ஆபத்தில்லாமல் இயங்க முடியாது என்பது மெய்ப்பிக்கப்பட்டதோடு மட்டுமல்ல, நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது என்பதையும் கண்கூடாக நிரூபணம் செய்துவிட்டது.
அதற்கான திட்டச் செலவு எவ்வளவு தெரியுமா? முதல் உலை 1964இல் 33.95 கோடியாக திட்டமிடப்பட்டு 1973இல் 73.27 கோடியாக உயர்ந்தது.
இரண்டாவது உலை 1972இல் 58.16 கோடியாகத் திட்டமிடப் பட்டு 1980இல் 92.26 கோடியாக உயர்ந்தது. ஆக, இரண்டு உலைக்குமான திட்டச் செலவு மொத்தம் 165 கோடியே 53 லட்ச ரூபாய்.
கல்பாக்கம் அணுமின் நிலையம்
சென்னைக்குத் தெற்கே 60 கி.மீ. தொலைவில் வங்கக் கடற்கரையோரம், கல்பாக்கம் என்னும் இடத்தில் கட்டப் பட்டுள்ள அணுமின் நிலையம் இது. இது 235 மெ.வா. உற்பத்தித் திறன் கொண்ட இரு அணு உலைகளைக் கொண்டதாகும். இதன் முதல் உலை MAP – 1 1977லும், இரண்டாவது உலை MAP - 2 1979லும் உற் பத்தியைத் தொடங்கும் என்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிறகு 1985லேயே முழு அளவிலான உற்பத்தி சாத்தியம் என்று சொல்லப்பட்டது.
இது ராஜஸ்தானில் கையை விரித்து ஊற்றி மூடிய அதே கனடத் தொழில் நுட்பத்தைக் கொண்ட ‘காண்டு’ முறை அணு உலைதான் என்றாலும், இது முழுக்க முழுக்க 90 சதவீதம் இந்தியத் தொழில் நுட்பத் திறமையுடன் இந்திய விஞ்ஞானி களால் வடிவமைக்கப்பட்டது என்கிறார்கள்.
என்றாலும் இந்த உலையும் சும்மா இல்லை. இதன் முதல் உலையை 1984 ஜூலையில் அப்போதைய பிரதமராயிருந்த திருமதி இந்திராகாந்தி தொடங்கி வைக்க, சில நாள்களுக்குள்ளேயே உலையில் சிறு வெடிப்பு ஏற்பட்டது. அதை உடனடியாகச் சரிசெய்ய முடியாது என்பதால், அதை சரிப்படுத்தும் சில மாதங்கள் வரை உற்பத்தி தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இவ்விபத்து பற்றிய விவரங்களோ விளைவுகளோ இதுவரை எதுவும் வெளியே அறிவிக்கப்படவில்லை.
86ஆம் ஆண்டில் மட்டும் இந்நிலையம் பலமுறை மூடப்பட்டது. மூடப்பட்ட ஒவ்வொரு முறையும் பல மாதங்கள் உற்பத்தித் தடங்கல் ஏற்பட்டது.
1986 மார்ச் மாதம் மின்சார டிரான்ஸ்ஃபார்மர் எரிந்து குளிரூட்டும் சாதனம் பழுதுபட்டதால் கதிரியக்கமுள்ள கனநீர், 16 டன்னுக்கு மேல் உலையில் அடிப்பகுதியில் கொட்டியது. இதில் இடுப்பளவு நீரில் நின்று தொழிலாளர்கள் வேலை செய்திருக்கிறார்கள். இக்கனநீரின் கதிரியக்கத் தன்மை பற்றியோ, அதில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றியோ நிர்வாகம் எதுவுமே அறிவிக்கவில்லை.
1986 ஆகஸ்டு 14ஆம் தேதி ஆஹஞ - 2 இல் தீய்ந்துபோன எரிபொருள் கலவை பண்டல்களை வெளியே எடுக்கையில் அவை உடைந்து எங்கெங்கோ சிக்கிக் கொண்டன. இதுவரை எந்த உலையிலும் ஏற்படாத ஒரு சிக்கல் இது என்று அணுசக்தித் துறைத் தலைவர், டாக்டர் ராஜா ராமண்ணா கூறியிருக்கிறார். இப்படிச் சிக்கிய துகள்களை, சாதாரண தொழிலாளர்களைப் பயன்படுத்தி, கையை உள்ளே விட்டு எடுக்கச் சொல்லிவிட்டு, எந்திர மனிதனைத் (Robot) தயார் செய்து அதனை எடுத்து விட்டதாகப் பொய்யான தகவல் அளித்திருக்கிறார்கள்.
கல்பாக்கம் டவுன்ஷிப் பகுதியில் வசிப்பவர்களைத் தவிர, சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து தினம் இங்கு சுமார் நூற்றுக்கணக்கானோர் தினக் கூலிகளாக வந்து கட்டட வேலை செய்து போகின்றனர். இவர்களில் பலர் அணு உலைப் பகுதியில் அபாயகரமான பகுதிகளிலும் வேலைக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு ஏற்படும் கதிர்வீச்சு பற்றியோ அதன் பாதிப்பு பற்றியோ இவர்களுக்கு எதுவுமே தெரியாது. நிர்வாகமும் சொல்வது இல்லை.
1986, நவம்பர் 20ஆம் தேதி கல்பாக்கம் டவுன்ஷிப்பில் உள்ள ஊழியர் கோ-ஆப்பரேடிவ் ஸ்டோருக்கு (கூட்டுறவு பண்டக சாலைக்கு) வேண்டி வாங்கி வரப்பட்ட பொருள்கள் 1.5 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ளவை எரிக்கப்பட்டன. இப்பொருட்களை ஏற்றி வந்த லாரி ‘சென்ட்ரல் வேஸ்ட் மெடீரியல் ஃபெசிலிட்டி’ நிறுவனத்தைச் சேர்ந்தது என்பதால் வாங்கி வந்த பொருட்கள் கதிரியக்கம் கலந்தது என்பதே பொருட்களை எரித்ததற்கான உண்மையான காரணம். ஆனால் இந்தப் பொருட்களை எரித்ததற்கும் அதன் உண்மையான காரணத்தைச் சொல்லாமல் பொருள்கள் மிகவும் பழசாகப் போய், பழைய சரக்குகளைக் காலி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதாலேயே அவற்றை எரித்து விட்டதாகப் பொய்யான தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.
இப்படித் தொட்டதெல்லாம் வம்பாக முடியும் இந்த அணு சக்தியைக் கல்பாக்கத்தில் நிறுவ ஆன செலவு எவ்வளவு தெரியுமா...? முதல் உலை 1973ல் 61.78 கோடியாகத் திட்டமிடப் பட்டு 1980ல் 107.87 கோடியாக உயர்ந்தது. இரண்டாவது உலை 1975ல் 70.63 கோடியாகத் திட்டமிடப் பட்டு 1980ல் 103.02 கோடியாக உயர்ந்தது. ஆக இரண்டு உலைக்குமான செலவு 210 கோடியே 89 இலட்சம் ரூபாய்.
இதுபோதாதென்று இங்கு ஒரு பரிசோதனை வேக ஈனுலை 1979 வாக்கில் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், இது திட்டமிட்டப்படி சாத்தியப்படாமல் ஆறு ஆண்டுகள் கழித்து 1985 அக்டோபர் 15லேயே தொடங்கப் பட்டதாகச் சொல்லப் படுகிறது. இந்தப் பரிசோதனை வேக ஈனுலைக்கு (Fast reeder Test Reactor) எவ்வளவு திட்டமிடப்பட்டது. பிறகு அது எவ்வளவாக உயர்ந்தது என்கிற விபரம் தெரியவில்லை.
நரோரா அணு சக்தி நிலையம்
இது உத்திரப் பிரதேச மாநிலம் புலாந்தர் மாவட்டத்தில் உள்ள நரோரா என்னும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது. எனவே, நரோரா அணுசக்தி நிலையம் (NAP) என அழைக்கப்படுகிறது. 1974ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட இந்நிலையம் 14 ஆண்டுகள் கட்டுமானப் பணியை முடித்து 1988ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று இதன் முதல் உலை (NAP.I) இயங்கத் தொடங்கியது.
இரண்டாவது உலை (NAP.II) 1990ஆம் ஆண்டு மே 31 வாக்கில் தொடஙகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவும் கனடத்தொழில் நுட்ப மூலம் கொண்ட CANDU- PHWR வகைப் பட்டதேயாகும்.
470 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இந்நிலையம், இரண்டு 235 மெ.வா. உலைகள் கொண்டது. ஏற்கெனவே இந்தியாவில் ‘இயங்கி வரும்’ கோடாவில் உள்ள ராஜஸ்தான் அணுமின் நிலையம் மற்றும் கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையம் ஆகிய நிலையங்களின் செயல்பாட்டு அனுபவங்களைக் கணக்கில் கொண்டு, மிகச் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் நிறுவப்பட்டுள்ளதாகவும், அதற்காகவே இதனை நிறுவ இத்தனை ஆண்டுகள் பிடித்தன என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இந்த நிலையம் கட்டுவதற்காகப் பயன்படுத்தப் பட்ட துணைக்கருவிகள் 1975இல் வாங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக திறந்த வெளிகளில் கிடந்ததால், அவை பாதுகாப்பற்றவைகளாகி விட்டன என்றும், நிலையம் துவங்கிய பிறகு இந்த இரண்டாம் தரமான கருவிகளால் ஏதும் விபத்து நேருமாயின் அது பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் எனவே இதன் கட்டுமானப் பணியை நிறுத்துமாறும் பகுதி வாழ்மக்களும் பல்வேறு - சமூகவியலாளர்களும் கோரியிருக்கிறார்கள். இவ்வாறு கோரியவர்களில் திருமதி விஜயலட்சுமி பண்டிட், வி.ஆர். கிருஷ்ணய்யர், பேராசிரியர் மது தந்த வாடே, மால்கம் ஆதிசேஷய்யா, ஐ.கே. குஜ்ரால், ஜனரல் ஜக்ஜீத்சிங் அரோரா, சோலி சராப்ஜி, நயன்தாரா சஹால் ஆகியவர்கள் முக்கியமானவர்கள்.
அதோடு இந்த அணுசக்தி நிலையம் மக்கள் நெருக்கம் மிகுந்த டெல்லி, மதுரா, ஆக்ரா, அலிகார் ஆகிய நகரங்களால் சூழப்பட்டிருக்கிறது. தவிரவும், வட இந்தியாவின் வளம் கொழிக்கும் முக்கிய மூன்று ஜீவ நதிகளான கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் இமயமலைப் பகுதிக்கும் இது நெருக்கமாக இருக்கிறது.
எனவே, நிலையத்தில் ஏதும் கோளாறோ அல்லது விபத்தோ ஏற்படுமாயின் இது சுற்றுப்புறப் பகுதிகளிலுள்ள நகரங்களைப் பாதித்து லட்சக்கணக்கான மக்களை அபாயத்துக்குள்ளாக்குவதோடு, மூன்று நதிகளது நீரையும் கதிரியக்கத் தாக்கத்துக்குள்ளாக்கும் பயங்கர ஆபத்தும் ஏற்பட வாய்ப்புண்டு என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு எது பற்றியும் லட்சியம் செய்து கொள்ளாமல் தன் திட்டப்படி நிலையத்தைக் கட்டிமுடித்து முதல் உலையையும் இயங்க வைத்துவிட்டது.
இந்த நிலையம் கட்ட எடுத்துக்கொள்ளப்பட்ட 15 ஆண்டுகளையும் சேர்த்து மொத்தம் 25 ஆண்டுகளே இயங்க இருக்கும் இந்நிலையம், ஒவ்வொரு விநாடியும் ஆபத்தோடு இயங்க இருப்பதோடு இது உற்பத்தி செய்ய இருக்கும் திட, திரவ அணுக் கழிவுகள் 25,000 ஆண்டுகளுக்கும் மேலாக விஷத் தன்மை கொண்டவையாகவும் நீடித்துவரப் போகிறது.
வளமான வண்டல் மண் படிந்த பகுதியான சிந்து கங்கைச் சமவெளியையே இந்தக் கழிவுகள் பாழ்படுத்தி நாசம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் இந்நிலையத்தின் பாதுகாப்பிற்கும் இக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கும், அணுசக்தித்துறை என்ன வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பதே இன்று அனைவர் மத்தியிலும் கேள்வியாக உள்ளது.
இந் நிலையத்துக்கான திட்ட ஒதுக்கீடு 1974ஆம் ஆண்டில் 323 கோடி ரூபாய். பிறகு மேலும் ரூ. 209 கோடி ஒதுக்கீடு செய்து அதன் திட்டச் செலவு 532 கோடியாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் 21 ஆண்டு உழைப்பில் 530 கோடி டாலர் செலவில் மிகச் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 900 மெ.வா. ‘ஹோர்ஹாம்’ அணுமின் நிலையத்தை மக்களின் எதிர்ப்பு காரணமாகவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தின் காரணமாகவும் அமெரிக்க அரசு மூடும்போது அதில் 20இல் ஒருபங்கே செலவிட்டுள்ள இந்நிலையத்தை மக்கள் நலன் கருதியும், இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் கருதியும் மூடிவிடுவதில் ஒன்றும் பெரிய இழப்பு நேர்ந்து விடாது என்பது அறிஞர்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்து. ஆனால், அரசு எதையும் காதில் போட்டுக் கொள்வதாக இல்லை.
கைகா அணுமின் நிலையம்
இது கர்நாடக மாநிலத்தின் மேற்குக் கடற்கரை ஓரமாக கார்வாருக்குக் கிழக்கே 32 கி.மீ. தூரத்தில் உள்ளது. 235 மெகாவாட் திறன் கொண்ட கைகா I, கைகா II ஆகிய இரு அணு உலைகளும் 1995 வாக்கில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்த புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சிவராம கரந்த், யூ.ஆர். அனந்தமூர்த்தி மற்றும் பங்களூர் இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள், பங்களூர், மைசூர், தார்வார் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஆகிய பலரும் இதை எதிர்த்து வந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வளம் நிறைந்த காட்டில் 2,220 ஏக்கர் பரப்பை, ஆக்ரமிக்கும் இத்திட்டம் ஏற்கெனவே தன் காடு அழிப்பு வேலையைத் தொடங்கிவிட்டது. இத்துடன் மைசூருக்கு அருகில் ரத்னஹள்ளி என்ற இடத்தில் செறிவூட்டப்பட்ட யுரேனியத் தயாரிப்பு நிலையம் கோலார் தங்க வயலுக்கு அருகில் அணுக்கழிவுகளைக் கொட்டிப் புதைக்க பரீட்சார்த்த ஆய்வுக் கூடம், ஆகியவற்றையும் சேர்த்தே கர்நாடக மக்கள் எதிர்த்து வருகிறார்கள். இருந்தும் அரசு விடாப்பிடியாக இத்திட்டங்களைத் தொடர்வதன் காரணம்;
கார்வாருக்கு அருகே மீனவர்களையும், விவசாயிகளையும் வெளியேற்றியும் 5,000 ஏக்கர் காட்டை அழித்தும் 8,000 ஏக்கர் பரப்பில் நிறுவ இருக்கிற ‘கடல் பறவை’ என்கிற கப்பற்படைத் தளத்துக்கு அணுசக்தியால் இயங்க இருக்கும் நீர் மூழ்கிக் பல்களுக்கும், அக்கப்பல்களில் நிறுவ இருக்கும் அணு ஆயுதங்களுக்கும் புளூட்டோனியம் சப்ளை செய்வதற்காகத்தான் என்று சந்தேகப்பட வைக்கிறது.
இந்தத் திட்டத்தையொட்டி எழுந்த எதிர்ப்பின் காரணமாக அப்போதை கர்நாடக முதல்வராயிருந்த ராமகிருஷ்ண ஹெக்டே ‘அணுசக்தியை ஏன் எதிர்க்கிறீர்கள். இது பற்றி நாடு தழுவிய விவாதத்துக்கு ஏற்பாடு செய்வோம் என்று சொன்னதாகவும், மத்திய அரசும் அணுசக்திக் கமிஷனும் இந்த விவாதத்தை விரும்பவில்லையாதலால், விவாதம் கிடப்பில் போடப்பட்டதாகவும் ஒரு தகவல் அறியப்படுகிறது.
ஆனால், கண்துடைப்புக்காக 88ஆம் ஆண்டு டிசம்பரில் விவாதம் என்கிற பெயரில் பங்களூரில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் சிவராம கரந்த் கலந்து கொணடு “இந்த மண்ணும் காற்றும், மற்றுமுள்ள இயற்கை வளங்களும் மக்களுக்குச் சொந்தமானவை, அணுசக்தியால் அதை மாசுபடுத்தாதீர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
‘அதெல்லாம் ஒன்றும் ஆகாது. வீணாக அஞ்சத் தேவையில்லை' என்று அப்போதைய அணுசக்திக்கமிஷன் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் தெரிவித்து அத்தோடு விஷயத்தை ஏறக் கட்டியிருக்கிறார்கள்.
1987ஆம் ஆண்டு ஆகஸ்டு 6, ஷிரோஷிமா தினத்தன்று இந்நிலையம் நிறுவப்படுவதை எதிர்த்துப் போராடியதில் இரண்டு காட்டுவாசிகள் துப்பாக்கி சூட்டில் பலியானதுதான் மிச்சம். அரசு எதையும் காதில் வாங்கிக் கொள்வதாய்த் தெரியவில்லை.
இதன் திட்ட மதிப்பு 730 கோடி ரூபாய்.

கதிரியக்கத்தின் உயிரியல் விளைவுகள் | scitamil.blogspot.com

கதிரியக்கமானது மின்காந்த ஆற்றல் (உ.ம்: காமா மற்றும் எக்ஸ் - கதிர்கள்) மற்றும் துகள் கதிர்களால் (உ.ம்: நியூட்ரான் மற்றும் ஆல்பா துகள்கள்) ஆனது. கதிரியக்கம் அது செல்லும் பாதையில் உள்ள பொருட்களின் மீது ஆற்றலைக் குவித்து அயனியாக்கம்  செய்கிறது.
கதிரியக்கம் உயிரினங்களில் பல்வேறு  விளைவுகளை ஏற்படுத்துகிறது. கதிரியக்கம் உயிரியல் மூலக்கூறுகளை தாக்கி சேதப்படுத்துகிறது. மிக முக்கியமாக மரபணு மூலக்கூறுகளான நியூக்ளிக் அமிலங்களை (DNA) நேரடியாகவோ (கதிரியக்க ஆற்றலை நியூக்ளிக் அமிலங்களின் மீது குவித்து சேதப்படுத்துதல்) மறைமுகமாக செல்களில் உள்ள நீரினை நீராற்பகுத்து தனிநிலை மூலக்கூறுகளை (DNA) உருவாக்குவதன் மூலமாகவோ சேதமடையச் செய்கிறது.
கதிரியக்கம் உண்டாக்கிய நியூக்ளிக் அமில சேதமானது செல்களில் தன்னிச்சையாக இயற்கையான முறையில் சரிசெய்யப்படுகிறது. கதிரியக்கம் உருவாக்கிய DNA சேதம் செல்களின் சரிசெய்யக்கூடிய அளவினைத் தாண்டும்பொது மரபணுவில் நிரந்தரமான முடக்கம் (mutation) ஏற்பட்டு புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு வகை செய்கிறது. இது பெரும்பாலும் கதிரியக்கம் தொடர்ச்சியாக உயிரினங்ககளின் மீது பாய்ச்சப்படும்போது நிகழ்கிறது. 
கதரியக்கம் புற்றுநோயை உருவாக்குகிறது என்ற போதிலும் அதே கதிரியக்கமானது (உ.ம்: X -கதிர்கள்ஃ கொபால்ட் கதிர்கள்) பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. சுமார் 80 சதவிகித புற்றுநோயாளிகள் அறுவைசிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் (chemotherapy) மட்டுமல்லாது கதிரியக்க சிகிச்சையும் மேற்கொள்கின்றனர். புற்றுநோய்க்காக கொடுக்கப்படும் கதிரியக்கத்தின் பக்கவிளைவாக  இரண்டாம்வகை புற்றுநோயினை உருவாக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது. முக்கியமாக கதிரியக்கமானது இரத்தப் புற்றுநோயை உருவாக்குகிறது.
எல்லா செல்களிலும் கதிரியக்கம் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. கதிரியக்கமானது உடலின் வெவ்வேறு உறுப்புகளில் வெவ்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. முக்கியமாக மிக விரைவான வளர்ச்சித்திறன் கொண்ட செல்களான இரத்த செல்கள் (குறிப்பாக வெள்ளையணுக்கள்) மற்றும் எலும்பு மஜ்ஜை செல்களில் மிக அதிக விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனைத் தொடர்ந்து விந்தணு செல்கள் மற்றும் குடல் எபீதிலிய செல்கள் கதிரியக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன‌. விந்தணுக்களின் எண்ணிக்கையை கதிரியக்கம் வெகுவாக குறைக்கிறது. இது மலட்டுத் தன்மைக்குக் காரணமாகிறது. குடல் எபிதிலிய செல்கள் கதரியக்கத்தால் வெகுவாக பாதிக்கப்ப‌டுவதால் இந்த செல்களில் உணவு மற்றும் ஊட்டங்களை உறிஞ்சும் ஆற்றல் குறைகிறது. இதனால் கதிரியக்கம் தாக்கப்பட்ட மனிதனின் பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு வகையான தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தோல் மற்றும் நரம்பு செல்கள் மிக அதிக அளவில் கதிரியக்கத்தால் பாதிக்கப்படுகிறது.
ஒருமுறை கதிரியக்கம் உடலில் செலுத்தப்பட்டாலும் அது அதனுடைய விளைவுகளை உடலில் உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ உயிர்வாழ்வினங்களில் ஏற்படுத்துகிறது. சில உடனடி விளைவுகளான வாந்தி, மயக்கம், காய்ச்சல் மற்றும் இரத்த செல்களில் மாறுபாடு, சிறுகுடல் புண், எலும்பு மஜ்ஜை சேதம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
இதைத்தவிர கதிரியக்கமானது நீண்ட கால விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது. கதிரியக்கத்தின் தாக்குதலுக்கு தொடர்ச்சியாக உட்படும்பொது இரத்தப் புற்றுநோய் (leukemia), எலும்பு புற்றுநோய், தைராய்டு சுரப்பி புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை உருவாகின்றது. மேலும் கதிரியக்கத்தால் மரபணு செல்களில் ஏற்படும் மாற்றமானது குறைபாடுகளுடன் உடைய குழந்தைகள் பிறக்கக் காரணமாகின்றது. விரைவாக வளரும் கருவின் செல்கள் கதிரியக்கத்தின் தாக்குதலுக்கு வெகுவாக உட்படுகிறது. கர்ப்பிணிகள் கதிரியக்கத்தின் தாக்குதலக்கு உள்ளாகும்போது உடல் வளர்ச்சிக் குறைபாடு மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறக்கின்றன‌. மேலும் இந்தக் குழந்தைகள் எதிர்காலத்தில் எளிதாக புற்றுநோயின் தாக்குதலுக்கு உட்படுகின்றன.
நியூக்ளியர் அணு உலைகளுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் கதிரியக்கத்தின் தாக்குதலால் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். அணு உலைகளிலிருந்து வெளியேறும் கதிரியக்க சீசியம் மற்றும் கதிரியக்க அயோடின் போன்றவை அணு உலைகளுக்கு அருகாமையில் வசிக்கும் உயிரினங்களில் மிக அதிக அளவில் பாதிப்புகளை நிச்சயமாக உருவாக்கும்

திருநீறு அணிவது ஏன் | scitamil.blogspot.com

திருநீறு அணிவது ஏன் | scitamil.blogspot.com
நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.
மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது